தொக்காக மாட்டிய மாப்பிள்ளை.. 2 ஆம் வாய்ப்பாடு கூட தெரியலயே.. மணப்பெண் எடுத்த துணிச்சல் முடிவு! ஆஹா
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமணம் செய்வதற்காக பொய் சொல்லிய மாப்பிள்ளை, கடைசியாக மாலை மாற்றும் நேரத்தில் தொக்காக மாட்டிக்கொண்டார். 2 ஆம் வாய்ப்பாடு சொல்ல சொல்லி கேட்கும்போது மாப்பிள்ளை திருதிருவென விழித்துள்ளார். தொடர்ந்து மணப்பெண் எடுத்த துணிச்சல் முடிவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் விழா.... வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய நபரை கரம் பிடிக்க கூடிய நிகழ்வாக திருமணம் உள்ளது. இதனால், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

தங்களுக்கு வரக்கூடிய பார்ட்னர் எப்படி இருக்க வேண்டும்.. என்ன படித்து இருக்க வேண்டும் என்ற கனவுடன் மணமக்கள் இருப்பார்கள்... தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற மணமகன் அல்லது மணமகளை தேர்வு செய்து கொடுக்க பெற்றோரும் அதிக மெனக்கெடுவார்கள். எனினும், சில நேரத்தில் பொய்யை சொல்லி எப்படியாவது திருமணத்தை நடத்த முயற்சிக்கிறார்கள்.
அப்படியான ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. ஆனால், மணப்பெண்ணோ சமயோசிதமாக யோசித்து மாப்பிள்ளையின் தில்லாலங்கடியை கண்டுபிடித்து விட்டார்.. அதோடு இந்த திருமணத்தையும் நிறுத்திவிட்டார். இது பற்றிய செய்தி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த விவரம் வருமாறு:-
உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அண்மையில் திருமணம் நடைபெற இருந்தது. இரு வீட்டின் சம்மதத்தின் பேரில் இந்த திருமண விழா நடைபெற்றது. தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை நன்கு படித்து இருக்க வேண்டும் என்பது மணமகளின் விருப்பமாக இருந்து இருக்கிறது. எனவே மணமகள் வீட்டினரும் படித்த மாப்பிள்ளையே தேடியிருக்கிறார்கள்..
மணமகன் வீட்டிலோ மாப்பிள்ளை படித்தவர் என்று சொன்னதால், திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள்.. ஆனால் உண்மையில் மாப்பிள்ளை வெறும் 2 ஆம் வகுப்பு மட்டுமே படித்து இருந்து இருக்கிறார்.. பொய்யை சொல்லி திருமணத்திற்கும் ஏற்பாடு செய்து விட்டார்கள்.. மணமகன் உண்மையிலேயே படித்தவர்தானா என்ற சந்தேகம் மணப்பெண்ணுக்கு இருந்துள்ளது.
இதனால், மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு முன்பாக 2 ஆம் வகுப்பு வாய்ப்பாடு படிக்க சொல்லியிருக்கிறார். ஆனால், இதை சொல்ல தெரியாமல் திருதிருவென மாப்பிள்ளை விழித்துள்ளார். இதனால், மாப்பிள்ளையின் குட்டு உடைந்து விட்டது. மாப்பிள்ளைக்கு 2 ஆம் வாய்ப்பாடு கூட தெரியாததை பார்த்ததும் மணப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மணப்பெண், அடுத்த நொடியே திருமணத்தை நிறுத்திவிட்டார்.. தான் எதிர்பார்த்தது போல மணமகன் கிடைக்காதது தெரிந்ததும், துணிச்சலாக அந்த மணமகள்.. கல்யாணத்தை நிறுத்தியது சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்த்து பதிவிட்டு வருகிறார்கள்..
சின்ன வயதில் படித்த 2 ஆம் வகுப்பு வாய்ப்பாடு மறந்துவிட்டதாகவும், இனி கல்யாணத்திற்கு முன்னால் 2 ஆம் வகுப்பு வாய்பாட்டை மனப்பாடம் செய்து விட்டுத்தான் வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல, தனக்கு விருப்பம் இல்லாததால் எந்த தயக்கமும் இன்றி திருமணத்தை நிறுத்திய மணமகளின் செயலையும் பாராட்டி நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications