ஜாதி அரசியல், அதிகாரம் மூலம் மிரட்டல்- என் வேட்புமனு கதி? யோகி மீது சந்திரசேகர ஆசாத் பாய்ச்சல்
லக்னோ: உ.பி. சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிடும் தமது வேட்புமனுவை அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் நிராகரிக்க செய்துவிடுவார் என்று பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
உ.பி. சட்டசபை தேர்தலில் கோரக்பூர் அர்பன் தொகுதிக்கு மார்ச் 3-ல் தேர்தல் நடைபெறுகிறது. இது 6-வது கட்டமாக நடைபெறும் தேர்தல்.
இத்தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் போட்டியிடுகிறார். சந்திரசேகர ஆசாத்தும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் வேட்புமனு
யோகி ஆதித்யநாத் தமது வேட்பு மனுவில் ரூ1,54,94,054 மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. 6 வங்கி கணக்குகள் உள்ளன. ரூ12,000 மதிப்பிலான சாம்சங் செல்போன் உள்ளது. ரூ1,00,000 மதிப்பிலான கைத் துப்பாக்கி, ரூ80,000 மதிப்பிலான ரிவால்வர் ஆகியவையும் உள்ளன. ரூ49,000 மதிப்பிலான 20 கிராம் தங்க நகைகள் உள்ளன. தங்க செயின் உள்ளது. ஆபரணங்களைக் கொண்ட உருத்திராட்ச மாலை உள்ளது. மேலும் 2020-2021-ல் ஆண்டு வருமானம் 13,20,653; 2019-20ல் ரூ15,68,799; 2018-19-ல் ரூ 18,27,639; 2017-18-ல் ரூ 14,38,670 என குறிப்பிட்டுள்ளார். மேலும் யோகி பெயரில் எந்த விளைநிலமும் இல்லை. அதேபோல் யோகிக்கு சொந்த வாகனமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸ் மீது புகார்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சந்திரசேகர ஆசாத் கூறியதாவது: பாஜக எம்.பி.யின் உறவினர்தான் கோரக்பூர் தொகுதி காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கிறார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தீவிர ஆதரவாளர் அவர். யோகி பதிவிடும் அத்தனை ட்வீட்டுகளையும் ரீ ட்வீட் செய்கிறார்.

யோகியால் அச்சம்
கோரக்பூர் தொகுதியில் பல்வேறு தரப்பு மக்கள் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் வெளிப்படையாக பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்க தயங்குகின்றனர். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் காரணம்.

என்னவாகுமோ வேட்புமனு
அதிகாரத்தை யோகி ஆதித்யநாத் தவறாக பயன்படுத்துகிறார். முதல்வர் என்பதால் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி என்னுடைய வேட்புமனுவை நிராகரிக்க செய்யவும் வாய்ப்பிருக்கிறது. உ.பி. எதிர்க்கட்சிகள் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்வரவில்லை. இவ்வாறு சந்திரசேகர ஆசாத் கூறினார்.












Click it and Unblock the Notifications