ஷாக்.. ஆளுநர் கான்வாயில் திடீரென மோதிய கார்! பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்! இரவில் நடந்த பரபரப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சென்ற கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கான்வாயில் கருப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ஆரிப் முகமது கான் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியால் இது நடந்துள்ளதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரளா ஆளுநராக இருப்பவர் ஆரிப் முகமது கான். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவிலேயே அவர் காரில் டெல்லி நோக்கி புறப்பட்டார்.
இதையடுத்து ஆளுநர் ஆரிப் முகமது கான் பாதுகாப்புக்காக அவரது காரின் முன்பும், பின்னும் போலீசார் சென்றனர். இந்த கான்வாய் செக்டார் 113 போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கருப்பு நிற ஸ்கார்ப்பியோ கார் திடீரென ஆளுநர் கான்வாயில் நுழைந்ததோடு போலீஸ் வாகனத்தின் மீது மோதியது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் ஆளுநர் ஆரிப் முகமது கானின் பயணம் தடைப்படவில்லை. அவர் தொடர்ந்து டெல்லி சென்றார். முன்னதாக விபத்தை ஏற்படுத்தியதும் காரில் இருந்த 2 பேர் வேகமாக தப்பிக்க முயன்றனர். இருப்பினும் போலீசார் உடனடியாக அவர்களை மடக்கி பிடித்தனர்.
அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் காசியாபாத்தை சேர்ந்த மோனு குமார், கவுரவ் சோலங்கி என்பது தெரியவந்தது. இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல்), 353 (அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் அல்லது தாக்குதல்) உள்பட மொத்தம் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி நொய்டா கூடுதல் துணை கமிஷனர் சக்தி மோகன் அவஸ்தி கூறுகையில், ‛‛வேகமாக வந்த கார் ஆளுநரின் கான்வாயில் சென்ற டிராபிக் போலீஸ்காரர்கள் பயணித்த காரில் மோதியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கைதான 2 பேரிடம் விசாரித்து வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications