பள்ளிகளில் தேர்வுகள் ரத்து.. 1முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் 'ஆல் பாஸ்' .. உ.பி. அரசு அதிரடி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா அச்சுறுத்தலால் அங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஒன்று முதல் 8வது வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவரும் பாஸ் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று மதியம் நிலவரப்படி 149 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உத்தரப்பிரதேச அரசு அம்மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஏப்ரல் 2ம் தேதி வரை மூடி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மார்ச் 16 முத்ல் 23 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது . அதன்பிறகு மார்ச் 28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது உத்தரப்பிரதேச அரசு ஏப்ரல் 2 வரை விடுமுறை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை உத்தரப்பிரதேச மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ரேணுகா குமார் பிறப்பித்துள்ளார்.
அவர் தனது உத்தரவில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், எனவே ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் உயர் வகுப்பிற்கு செல்லப்போகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு வெளிநாட்டவர் உள்பட 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications