டோண்ட் வொர்ரி.. அடுத்த தேர்தலில்.. 'பாஜக துடைத்தெறியப்படும்'.. லாலு பிரசாத் யாதவ் விளாசல்
லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்ட லாலு பிரசாத் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், ''டோண்ட் வொர்ரி.. அடுத்த தேர்தலில் பாஜக துடைத்தெறியப்படும்'' என்று பேசினார்.
மத்தியில் ஆளும் பாஜகவை வரும் மக்களவை தேர்தலில் எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன.
இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. அசோக் கெலாட்டை ஓவர்டேக் செய்த சசி தரூர்! அடுத்து என்ன நடக்கும்?
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி
இதற்கிடையில், திடீர் திருப்பமாக பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமாரும் இந்த கோதாவில் குதித்துள்ளார். பாஜகவை கழற்றி விட்ட கையோடு காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிர ஜனதா தளம் ஆகிய கட்சிகளோடு கைகோர்த்த நிதீஷ் குமார், மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தற்போது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் முழு வீச்சில் நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார்.
சோனியா காந்தியை சந்திக்க
இதற்காக ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திர சேகர் ராவ் என நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நாளை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை லாலுபிரசாத் யாதவும், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் நேரில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகவும் கவனம் பெற்றுள்ளது. 2024 மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இந்த சந்திப்பின் போது முக்கிய ஆலோசனை நடைபெறலாம் என்று தெரிகிறது.
நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாளர்
ஒருபக்கம் நிதிஷ்குமார் தான் பிரதமர் வேட்பாளர் இல்லை என்றாலும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்று பேசப்படும் நிலையில், சோனியா காந்தியுடனான நாளைய சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், டெல்லி வருவதற்காக விமானம் நிலையம் வந்த லாலு பிரசாத் யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பாஜக துடைத்தெறியப்படும்
அதற்கு பதிலளித்து லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், தனக்கே உரிய ஸ்டைலில் ''கவலைப்பட வேண்டாம். பாஜக துடைத்தெறியப்படும்'' என்றார். ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை மற்றும் உடல் நல பாதிப்புகளால் சமீப காலமாக ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் லாலு பிரசாத் யாதவ், தனக்கே உரிய பாணியில் பதிலளித்து விட்டு சென்றார்.