வசமாய் சிக்கிய சமாஜ்வாதி தலைவர்.. மனைவி, மகனோடு அசாம் கானுக்கு 7 ஆண்டு சிறை.. ஷாக்கில் அகிலேஷ்
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான அசாம் கான் அவரது மனைவி மற்றும் மகன் என 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராம்பூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார். இந்த கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் அசாம் கான்.

இந்நிலையில் தான் அசாம் கான் கடந்த 2019 ஆம் ஆண்டு போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கில் இவர் சிக்கினார். மேலும் அவரது மனைவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசாம் உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
அதாவது அசாம் கான்-தசீன் பாத்திமா தம்பதி மகன் அப்துல்லா அசாமுக்கு 2 பிறப்பு சான்றிதழ்கள் வாங்கி உள்ளனர். ராம்பூர் நகராட்சி வழங்கிய சான்றிதழில், அப்துல்லா அசாம் 1993 ஜனவரி 1ம் தேதி ராம்பூரில் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. இன்னொரு சான்றிதழில் அவர் 1990 செப்டம்பர் 30ல் லக்னோவில் பிறந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அசாம் கான், அவரது மனைவி தசீன் பாத்திமா, மகன் அப்துல்லா அசாம் ஆகியோர் மீது ராம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அவர்கள் 3 பேர் மீதும் வழக்கப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு ராம்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகை மீதான விசாரணையும் தொடங்கி நடந்து வந்தது. அசாம் கான் மற்றும் அரசு தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
அதன்படி போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில் அசாம் கான், அவரது மனவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசாம் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. மேலும் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபற்றி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் பிரகாஷ் சக்சேனா கூறுகையில், ‛‛7 ஆண்டு சிறை 3 பேரும் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்'' என்றார்.
குடும்பத்தோடு சிறைக்கு செல்லும் அசாம் கான் உத்தர பிரதேசத்தில் பெரிய அரசியல் தலைவராக பார்க்கப்படுகிறார். மேலும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார். மேலும் அடிப்படையில் வழக்கறிஞரான இவர் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருந்துள்ளார். அதோடு 10 முறை ராம்பூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாகி உள்ளார். பல துறைகளில் அமைச்சராக பணியாற்றி உள்ளார்.
இவர் மறைந்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவுடன் மிகவும் நெருக்கமான தலைவராக அறியப்பட்டவர். கடந்த ஆண்டு நடந்த தேர்தலிலும் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு இவர் எம்எல்ஏவாக தேர்வாகி இருந்தார். ஆனால் சர்ச்சைக்குரிய பேச்சில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் தற்போதைய தண்டனையால் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications