உ.பி. கோசி இடைத்தேர்தல் களத்தில் “இந்தியா” கூட்டணி”.. லோக்சபா தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறுமா?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கோசி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு ஆதராக "இந்தியா" கூட்டணி கட்சிகள் அனைத்தும் களமிறங்கி உள்ளன. கோசி தொகுதி தேர்தல் வெற்றி லோக்சபா தேர்தல் பார்முலாவுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோசி தொகுதிக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் பதிவாகும் வாக்குகள் செப்டம்பர் 8-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கோசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சுதாகர் சிங்கை வேட்பாளராக அறிவித்துள்ளது. அவரை ஆதரிக்கும் வகையில் "இந்தியா" கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தள், அப்னா தள்(கே) ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தாமல் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா கூட்டணியை பொறுத்தவரை லோக்சபா தேர்தலிலும் இதேபோல் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒரு கட்சி வேட்பாளரை மட்டும் நிறுத்தி அனைத்து கூட்டணி கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்ற பார்முலா முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த பார்முலாதான் கோசி இடைத்தேர்தலிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. கோசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாக அதிகாரப்பூர்வமான கடிதங்களும் "இந்தியா" கூட்டணி கட்சிகளால் கொடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக உ.பி. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஜய் ராய் கூறுகையில், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக மீது மக்களும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் அனைத்து "இந்தியா" கூட்டணி கட்சிகளும் ஒருமித்து சமாஜ்வாதி வேட்பாளரை ஆதரிக்கிறோம் என்றார்.
2022-ம் ஆண்டு உ.பி. தேர்தலில் கோசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தாராசிங் சவுகான் வெற்றி பெற்றார். ஆனால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் ஐக்கியமானார். இதனால் கோசி தொகுதி தற்போது இடைத்தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இம்முறை பாஜக வேட்பாளராக தாரா சிங் சவுகான் போட்டியிடுகிறார். ஆகையால் அவரை வீழ்த்துவது என்பது சமாஜ்வாதி கட்சிக்கு முதன்மையான பிரச்சனை. அதனாலேயே "இந்தியா" கூட்டணி கட்சிகளும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை முழு வீச்சில் ஆதரிக்கின்றன.












Click it and Unblock the Notifications