மசூதியில் கண்டிப்பாக ஜென்மாஷ்டமி பூஜை செய்யனும்.. யோகிக்கு ரத்தத்திலேயே கடிதம் எழுதிய தினேஷ்!
லக்னோ: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஷாஹி இத்கா மசூதியில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வரும் ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாகவும், கத்ரா கேசவ் தேவ் கோயில் பகுதியில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி இத்கா மசூதியை அகற்ற வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கிருஷ்ணர் பிறந்த இடமான இங்கு கத்ரா கேசவ் தேவ் கிருஷ்ணர் கோயில் உள்ளது.

கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு
1669-70 காலகட்டத்தில், முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் 13.37 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் மசூதி கட்டப்பட்டது. கிருஷ்ண பகவானை வழிபடுபவர்கள் என்ற முறையில் அவருடைய சொத்துகளை மீட்டுத் தரக் கோரி வழக்கு தொடர எங்களுக்கு உரிமை உள்ளது.

மீட்டுத்தர வேண்டும்
கிருஷ்ண ஜென்ம பூமியில் மசூதி தவறாகக் கட்டப்பட்டுள்ளது. சொத்துப் பங்கீடு தொடர்பாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு சமரசம் ஏற்பட்டது. ஆனால் அந்தச் சமரசம் சட்டவிரோதமானது. எனவே அந்த மசூதி இடத்தை மீட்டு பெரும்பான்மை இந்துக்கள் நம்பும் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்டுத் தர வேண்டும் என்று வாதிட்டப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தி
தொடர்ந்து நீதிமன்றத்தில் கிருஷ்ண ஜென்ம பூமி - ஷாஹி இத்கா மசூதி வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, அகில பாரத இந்து மகாசபா உறுப்பினரான தினேஷ் ஷர்மா என்பவர் , கிருஷ்ணர் பிறந்த இடம் எனக் கூறி, ஷாஹி இத்கா மசூதியில் கிருஷ்ண ஜெயந்தியன்று வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

அனுமதிக்க கோரிக்கை
அதில், கிருஷ்ணர் பிறந்த இடம் இல்லாத இடத்தில் தான் இதுவரை கிருஷ்ணர் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்து கடவுள் ஹனுமனின் அவதாரமான யோகி ஆதித்யநாத், கிருஷ்ணர் பிறந்த இடத்தில் வழிபாடு நடத்த அனுமதி வழங்குவார் என்று நம்பிக்கை உள்ளது. ஒருவேளை வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டால், கிருஷ்ணர் பிறந்த இடத்தில் அவருக்கு வழிபாடு செய்யாமல் ஒரு வாழ்க்கை வாழ்வது பயனற்றது. அதனால் தான் இறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று தினேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications