ஞாபகம் இருக்கா.. ஒற்றை சட்டம்.. ஒட்டுமொத்த நாடும் 'அவர்களுக்கு' அடிமையாகிவிடும்.. அகிலேஷ் அட்டாக்
லக்னோ: மத்திய அரசு தொடர்ந்து பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டங்களை இயற்றினால், விரைவில் நாம் அவர்களுக்கு அடிமையாகிவிடுவோம் என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் 100 நாட்களைக் கடந்துள்ள போதும் போராட்டம் இன்னும் முடியவில்லை.
அதேநேரம் மத்திய அரசும் இந்த மூன்று விவசாய சட்டங்களை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. திருத்தங்களைச் செய்ய தயார் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பெரு நிறுவனங்களுக்கு ஆதரவு
இந்நிலையில், இந்த மூன்று விவசாய சட்டங்களும் பெரு நிறுவனங்களுக்கே ஆதரவு அளிக்கும் வகையில் இருப்பதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதாவ் குற்றஞ்சாட்டியுள்ளார். மீருட் நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், மத்திய அரசின் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே பல்வேறு சட்டங்களையும் உருவாக்குவதாகக் குற்றஞ்சாட்டினார்.

அடிமையாகி விடுவோம்
பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியை குறிப்பிட்டு பேசிய அவர், வரலாறு படித்த அனைவருக்கும் தெரியும். வணிகம் செய்ய இங்கு வந்தவர்களே நம் நாட்டை 200 ஆண்டுகள் ஆண்டார்கள். அப்போது இயற்றப்பட்ட ஒற்றை சட்டம்தான் ஒரு நிறுவனத்தை அரசாக மாற்றியது. கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக மக்கள் எப்படிப் போராடினார்களோ, அதேபோன்ற ஒரு போராட்டமே தற்போது மீண்டும் தேவை என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து
மேலும், இந்த மூன்று விவசாய சட்டங்களும் நாட்டையே முற்றிலுமாக அழித்துவிடும் என்றும் அவர் விமர்சித்தார். மத்திய பாஜக அரசைக் கடந்த சில மாதங்களாகவே அகிலேஷ் யாதவ் தொடர்ந்து கடுமையாகத் தாக்கி பேசி வருகிறார். முன்னதாக, பாஜகவின் கொரோனா தடுப்பூசியை நம்ப முடியாது என்றும் தடுப்பூசியை தான் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

விவசாய சட்டங்கள்
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 18 மாதங்கள் வரை சட்டத்தை நிறுத்தி வைக்கத் தயாராகவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், சட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications