மக்களின் குறைகளை தீர்க்கும் இ-அலுவலகம்.. இன்று முதல் உ.பி முழுவதும் செயல்பாட்டுக்கு வருகிறது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இனி அனைத்து மாவட்டங்களிலும் இ-அலுவலகம் செயல்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இப்படி கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம்தான் இ-அலுவலகம். உத்தரப்பிரதேச அரசு மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பணிகளையும் முழுவதுமாக இ-அலுவலகம் மூலம் நடத்தும், எனவே அனைத்து மாவட்டங்களிலும் இ-அலுவலகம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த அலுவலகங்கள் மூலம் மக்கள் தங்கள் குறைகளை சரி செய்துக்கொள்ளலாம். உதாரணமாக நில அளவீடு, ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் பெயர் மாற்றம் போன்றவை இதன் மூலம் செய்துக்கொள்ளலாம்.
அதேபோல மாவட்ட ஆட்சியருக்கு வேண்டும் தகவல்கள் அனைத்தும் இந்த இ-அலுவலகம் மூலம் பெறப்பட்டு வழங்கப்படும். மேலும் அரசு போடும் உத்தரவுகள் அனைத்தும் நிறைவேற்ற இந்த இ-அலுவலகங்கள் இன்றியமையாததாக இருக்கிறது. எனவே இந்த அலுவலகங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்த கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications