இறுதி சடங்கே முடிஞ்சிருச்சி! ‛இந்தியா’ கூட்டணி இல்லவே இல்லை! காங்கிரஸின் ஆச்சார்யா கருத்தால் சர்ச்சை
லக்னோ: ‛இந்தியா' கூட்டணி நிலைக்காது. இந்த கூட்டணி இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் இந்த கூட்டணிக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இறுதிச்சடங்கு செய்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற கூட்டணியை அமைத்தன. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகள் உள்ளன.

இந்நிலையில் தான் சமீபத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ‛இந்தியா' கூட்டணியை விட்டு வெளியேறியது. இதனால் தற்போது ‛இந்தியா' கூட்டணியில் 27 கட்சிகள் உள்ளன. இதில் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின்றி தனித்து போட்டியிட உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பும் ‛இந்தியா' கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும் இன்னும் தொகுதி பங்கீடு செய்யப்படாத நிலையில் ‛இந்தியா' கூட்டணியில் வரும் நாட்களில் குழப்பம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் வரை ‛இந்தியா' கூட்டணியில் எத்தனை கட்சிகள் பயணிக்க உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணிக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கருத்தை கூறியவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம். பீகாரில் பிராமண குடும்பத்தில் பிறந்த இவர் உத்தர பிரதேச மாநிலம் சம்பாலில் கல்கி அறக்கட்டளை நடத்தி வருகிறார். மேலும் கல்கி தாம் பீடாதிபதியாக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தியின் ஆதரவாளராக இவர் அறியப்படுகிறார்.
இவர் 2014 தேர்தலில் சம்பால் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 2019ல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து லக்னோ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கூறியதாவது:
‛இந்தியா' கூட்டணி நீண்டகாலம் நீடிக்காது.‛இந்தியா' கூட்டணி உருவானபோதே ஏராளமான நோய்கள் தாக்கியது. இதனால் இந்த கூட்டணி ஐசியூ மற்றம் வெண்டிலேட்டருக்கு சென்றது. இப்போது நிதிஷ் குமார் பாட்னாவில் இறுதி சடங்கு செய்துவிட்டார். இதனால் ‛இந்தியா' கூட்டணி இல்லை என்றே நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது உத்தர பிரதேசத்தில் புதிதாக கட்டும் கல்கி கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications