கடவுள் கிருஷ்ணர் பிடிவாதக்காரர்.. மதுரா ஜென்மபூமி குறித்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சூசக பேச்சு
லக்னோ: உத்தர பிரதேசம் மதுராவில் இந்து கோவிலை இடித்துவிட்டு ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் கூறி வரும் நிலையில் இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில், மதுரா கிருஷ்ண ஜென்ம்பூமிதான் என்பதை சூசகமாக வெளிப்படுத்தும் விதமாக யோகி ஆதித்யநாத் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
பாபர் மசூதி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்து கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து மசூதியின் ஒருபகுதியில் இந்துக்கள் பூஜை செய்து வழிபட தொடங்கி உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: இது ஒருபக்கம் இருக்க உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் பிறந்ததாக நம்பிக்கை நிலவுகிறது. இங்கு கேஷவ் தேவ் கோவில் இருந்ததாகவும், அது முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கடந்த 1669 - 79 காலக்கட்டத்தில் இடிக்கப்பட்டு, ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மசூதியில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தொல்லியல் ஆய்வுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கிருஷ்ணர் பிடிவாதமாக உள்ளார்: இந்த நிலையில், பாஜகவின் அடுத்த முன்னுரிமை பட்டியலில் இருப்பது மதுரா கிருஷ்ண ஜென்ம்பூமிதான் என்பதை சூசகமாக வெளிப்படுத்தும் விதமாக யோகி ஆதித்யநாத் இன்று கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறுகையில், அயோத்தியில் நடைபெற்ற கொண்டாட்டத்தை பார்த்த நந்தி பாபா, பிடிவாதத்துடன் தடுப்புகளை இரவில் உடைத்தெறிந்துள்ளார். தற்போது நமது கிருஷ்ணரும் பிடிவாதமாக உள்ளார்" என்றார். உத்தர பிரதேச சட்டமன்றத்தில் பேசுகையில், இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
நந்தி பாபா என்று கடவுள் சிவனை குறிப்பிட்டுள்ளார். நந்தி என்பது காளையை குறிக்கிறது. காளை என்பது சிவனின் வாகனம் என்று புராண இதிகாசங்களின் படி நம்பப்படுகிறது. எனவே தான் நந்தி பாபா என்று கடவுள் சிவனை யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார். கடந்த வாரம் ஞானவாபி மசூதிக்குள் ஒரு பகுதிக்குள் இந்துக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதையே யோகி ஆதித்யநாத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications