லக்கிம்பூர் விவசாயிகள் கொலை.. சரண்டர் ஆகாமல் தப்பித்த ஆஷிஷ் மிஸ்ரா.. நேபாளத்தில் தலைமறைவு?!
லக்னோ: லக்கிம்பூர் கேரி விவசாயிகள் கொலையில் முக்கிய குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேபாளத்தில் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தின் போது 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இங்கு நடந்த விவசாயிகள் போராட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷின் ஜீப் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இங்கு மொத்தமாக 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்டனர். பலர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா மீது உத்தர பிரதேச அரசு கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.

கைது
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் ஆஷிஷ் மிஸ்ரா இன்னும் கைது செய்யப்படவில்லை. இவரை இன்னும் போலீசார் தேடி வருகின்றனர். இன்று காலை 10.30 மணிக்கு அவர் சரண் அடைவதாக போலீசாரிடம் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இப்போது வரை ஆஷிஷ் மிஸ்ரா சரண் அடையவில்லை. இந்த நிலையில்தான் இவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

சரண்
நாளை காலை 11 மணி மணி வரை இவருக்கு சரண் அடைய நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு இருக்கிறார். போனை மாற்றிக்கொண்டு இருக்கிறார் என்று உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். இவரை பிடிக்க பல்வேறு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். இவர் நேபாளத்தில் பதுங்கி இருக்கலாம், அங்கே தலைமறைவாகி இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

விசாரணை
இதனால் போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்மையில் நேபாளத்தில் இவர் பதுங்கி இருந்தால் அங்கு சென்று கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மத்திய வெளியுறவுத்துறையின் உதவி தேவைப்படும். இதனால் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்வதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வழக்கு
இந்த நிலையில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோஹ்லி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழுவும், நீதி விசாரணை குழுவும் அமைக்கப்பட்டு இருப்பதாக நேற்று உத்தர பிரதேச அரசு கூறியது.

கைது கோரிக்கை
அதோடு நேற்று இந்த வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் உத்தர பிரதேச அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. இன்று நீதிபதிகள் விசாரணையின் போது இந்த வழக்கில் இன்னும் ஏன் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஏன் இந்த தாமதம்.

கொலை வழக்கு
இப்படி ஒரு கொலை வழக்கு ஒன்றில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உத்தர பிரதேச அரசு ஆஷிஷ் மிஸ்ரா போலீஸ் சரண் அடைய கூடுதல் நேரம் கேட்டுள்ளார். நாளை காலை 11 மணி நேரம் வரை அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை காலைக்குள் அவர் சரண் அடையவில்லை என்றால் கைது வாரண்ட் என்று உத்தர பிரதேச போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications