"கோட்டைக்கு திரும்பும் சுடலை மாடசாமி"! அமேதியில் மீண்டும் ராகுல் போட்டி- எதிராக பாஜக ஸ்மிருதி இரானி?
லக்னோ: அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் அஜய் ராய் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் அமேதி லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சியின் குறிப்பாக இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டையாக கருதப்பட்டது. 1967,71 தேர்தல்களில் இத்தொகுதியில் காங்கிரஸ் வென்றது. 1977-ல் அமேதியில் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இதன் பின்னர் 1980 முதல் 1996 வரை காங்கிரஸ் வசமே அமேதி தொகுதி இருந்தது. இந்திரா காந்தியின் மகன்கள் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி இத்தொகுதியின் எம்.பி.க்களாக வெற்றி பெற்று கோலோச்சினர். பின்னர் சோனியா காந்தி 1999-ல் அமேதியில் போட்டியிட்டு வென்றார். 2004, 2009, 2014 தேர்தல்களில் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கோட்டை என்பதை நிரூபித்தார்.

அமேதியில் தோல்வி: ஆனால் 2019-ம் ஆண்டு அமேதி, வயநாடு இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் காங்கிரஸின் கோட்டையான அமேதியில் தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவியது காங்கிரஸ் கட்சியினரை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. இத்தனைக்கும் 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானிய விட சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். அதேநேரத்தில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
பிரதமர் வேட்பாளர்: இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. அதேநேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் "ராகுல்" கந்தியையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடும். திமுக உள்ளிட்ட கட்சிகள் இதனை ஆதரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ராகுல் மீண்டும் போட்டி: இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என அம்மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அஜய் ராய் அறிவித்துள்ளார். உ.பி. மாநில எம்.எல்.ஏ.வாக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜய் ராய். 2019-ல் வாரணாசி லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டவர் அஜய் ராய். ராகுல் காந்தி அமேதியில் மீண்டும் போட்டியிடுவார் என்ற அஜய் ராய் அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications