ஹத்ராஸில் மீண்டும் சோகம்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற குற்றவாளி!
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாலியல் தொல்லைக் கொடுத்தவர் மீது போலீசில் புகாரளித்த பெண்ணின் தந்தையை, ஜாமினில் வெளிவந்த குற்றவாளி சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் படி, கௌரவ் ஷர்மா உள்ளிட்ட 4 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலை மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஹத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் இளம் பெண்ணை, உயர் வகுப்பை சேர்ந்த நான்கு பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
அதிர்வலையை ஏற்படுத்திய ஹத்ராஸ்
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் இளம் பெண்ணை, உயர் வகுப்பை சேர்ந்த நான்கு பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இளம்பெண்ணின் உடலை இரவோடு, இரவாக போலீசார் எரித்ததாகவும், உத்தரபிரதேச அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
மீண்டும் துயர சம்பவம்
இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது.இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் பாலியல் தொல்லைக் கொடுத்தவர் மீது போலீசில் புகாரளித்த பெண்ணின் தந்தையை, ஜாமினில் வெளிவந்த குற்றவாளி சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் உயர்ஜாதியை சேர்ந்த கௌரவ் சர்மா அதேப்பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
ஜாமீன் வழங்கியது
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மாவட்ட காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் கௌரவ் சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த கௌரவ் ஷர்மா உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், ஊருக்கு வெளியே உள்ள கோயிலுக்கு பெண்ணின் தந்தையை பேச்சுவார்த்தை என்றுக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
கொன்றனர் சுட்டுக் கொன்றனர்
பேச்சுவார்த்தைக்கு தனியாக சென்ற பெண்ணின் தந்தையை கௌரவ் ஷர்மா உள்ளிட்டோர் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் படி, கௌரவ் ஷர்மா உள்ளிட்ட 4 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலை மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், குற்றம் சாட்டப்பட்ட கௌரவ் ஷர்மாவை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.