போலி பாஸ்போர்ட்.. இந்தியாவுக்கு விபூதி அடிக்க பார்க்கும் வங்கதேசத்தினர்
லக்னோ: போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்ல முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கதேசத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் சிலர் தாய்லாந்து சென்று வேலை செய்வதற்காக போலி பாஸ்போர்ட் மூலம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தின் ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிமுல் பாருவா. இவர் போலியான இந்திய ஆதார் அட்டை, பாஸ்போர்ட்டை தயார் செய்து, மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆஷிஷ் ராய் என்ற பெயரில் போலியான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். பின்னர், லக்னோவில் உள்ள சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாங்காக்கிற்குச் செல்ல முயன்றார். அப்போது, ஷிமுல் பாருவா அதிகாரிகளிடம் காட்டிய ஆவணங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அடையாள அட்டைகளில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஷிமுல் பாருவாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஷிமுல் பாருவா காட்டிய அனைத்து அடையாள ஆணவங்களும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஷிமுலிடம் இருந்த உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. அதில், அவருடைய உண்மையான வங்கதேச பாஸ்போர்ட் இருந்துள்ளது. இதையடுத்து, ஷிமுல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சரோஜினி நகர் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வங்கதேசத்தில் போதிய அளவு வருமானம் கிடைக்காததால் சிலர் தாய்லாந்தில் வேலைகளைப் பெறுவதற்காக போலி பாஸ்போர்ட் தயாரித்து செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல, வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் போலி இந்திய ஆவணங்களுடன் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாங்காக்கிற்கு விமானத்தில் செல்ல முயன்றபோது கடந்த ஜூன் மாதத்தில் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர். இச்சம்பவங்களைத தொடர்ந்து, இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்குவதற்கு வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவிவரும் மோசடி கும்பலையும் கண்டுபிடித்துள்ளதாக புனே போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்று உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. கடந்த 2018 இல் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்த முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீடு முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் போராட்டம் வெடித்தது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா உடனே வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். ஷேக் ஹசீனா மற்றும் அவரது தங்கை ரெஹானாவும் மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச நாட்டின் அரசியல் அசாதாரண சூழ்நிலையால் தொடர்ந்து பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அந்த மாநிலத்தில் இந்து, கிறிஸ்துவ, புத்த உள்ளிட்ட சிறுபான்மை சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் இரு நாடுகளின் எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications