காதலிக்கு திருமணம்.. காஞ்சனாவாக மாறிய காதலர்.. சினிமாவை விஞ்சிய நிஜ சம்பவம்!
காதலியின் திருமணத்திற்கு பெண் வேடமிட்டு சென்ற காதலர், உறவினர்களிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் உபியில் நடந்துள்ளது.
லக்னோ: ஒரு மனிதனுக்குள் காதல் நுழைந்துவிட்டால் அது அவனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். அதிலும் பசங்க இருக்காங்களே கேட்கவே வேண்டாம்.. காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பாங்க.
இதனால தான் நம்ம சினிமா இயக்குனர்கள் பெரும்பாலும் காதல் கதைகளையே தேர்வு செய்கிறார்கள். காதலிக்காக ஒரு ஆண் பெண் வேடமிட்ட பல காதல் கதைகளை நாம் பார்த்திருக்கிறோம் அதில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியும் இருக்கின்றன.
ரூ.250 கோடிக்கு பல்நோக்கு மருத்துவமனை.. மதுரை நூலகம்.. 6 முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு அரசு
கமல் நடித்த அவ்வை சண்முகி, சிவகார்த்திகேயனின் ரெமோ உட்பட பல படங்களில் ஆண் பெண் வேடமிட்ட கருவை மையமாக வைத்து வெளிவந்திருக்கின்றன. குஷி படத்தில் ஒரு காட்சியில் விஜயின் நண்பர் அவரது காதலியை பார்க்க பர்தா அணிந்து பெண் போல் காதலியின் வீட்டுக்கு செல்வார்.
திருமணப் பெண் மாதிரி..
இதுபோன்ற ஒரு நிஜ சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது வாரணாசி அருகே உள்ள பாதோகி என்ற ஊரில் ஒரு திருமண வீட்டிற்குள் அழகான பெண் ஒருவர் திடீரென நுழைந்திருக்கிறார். பார்ப்பதற்கு திருமணப் பெண் போலவே புல் மேக்கப்போடு அவர் காட்சியளித்துள்ளார்.
புல் மேக்கப்
காஞ்சனா லாரன்ஸ் போன்று சிகப்பு நிற புடவை, அதற்கு ஏற்றார்போல் நகைகள், உதட்டில் லிப்ஸ்டிக், நீளமான தலைமுடி, காலில் பெண்கள் அணியும் ஹை ஹீல்ஸ் சப்பல், கையில் வளையல், காதில் தோடு என புல் மேக்கப்பில் பார்க்க பெண் போலவே இருந்தார் அவர். இதனாலேயே பலரது கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார்.
மாட்டிக்கிட்டியே குமாரு..
கூடவே திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் மணப்பெண் எங்கேயென அந்தப் பெண் கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வியால் தான் அவர் மாட்டிக் கொண்டார். ஏனெனில் பார்ப்பதற்கு பெண் போலவே இருந்தாலும் அவரது குரலும், நடவடிக்கைகளும் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.
சந்தேகம்
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்தப்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஒருவேளை திருமண வீட்டில் நகைகளைத் திருட வந்திருக்கிறாரோ என்ற சந்தேகம் அவர்களுக்கு. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த மணப்பெண்ணின் உறவினர்கள் புதிதாக வந்த அந்தப் பெண்ணை சோதனையிட்டுள்ளனர். அப்போது அவர் வைத்திருந்தது போலியான தலைமுடி என்பது தெரியவர அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பெண்ணல்ல.. ஆண்
இதன்மூலம் வந்தது பெண் அல்ல ஆண் தான் என்பதை உறவினர்கள் கண்டுபிடித்து விட்டனர். தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு பிடித்ததை உணர்ந்து விட்ட அந்த இளைஞர் உடனடியாக அங்கிருந்து தப்பிவிட்டார். வெளியே அவருக்காக காத்திருந்த அவரது நண்பர்களின் இருசக்கர வாகனத்தில் ஏறி, மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார்.
மணப்பெண்ணின் காதலர்
அந்த இளைஞர் பெண் வேடமிட்டு மண்டபத்திற்குள் வந்தது ஏன்? அவர் ஏன் மணப்பெண்ணை கேட்டார்?என்பது ஆரம்பத்தில் அங்கிருந்தவர்களுக்கு புரியவில்லை. ஆனால் தொடர் விசாரணையில் அவர் திருமணப் பெண்ணின் காதலர் என்றும் தனது காதலியை அவர் பார்க்க வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது.
கடத்தத் திட்டம்?
ஒரு வேளை பெண் வேடமிட்டு வந்து மணப்பெண்ணை கடத்திச் செல்ல அவர் திட்டமிட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இதுகுறித்த காவல்துறையில் புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் யார் என்பது இதுவரை வெளியில் தெரியவில்லை.