காருக்கு அடியில் 10 கி.மீ..தர தரவென இழுத்து செல்லப்பட்ட மனித உடல்..யமுனை விரைவுச்சாலையில் பயங்கரம்
லக்னோ: யமுனை விரைவுச்சாலையில் சுமார் 10 கி.மீட்டர் தூரம் மனித உடலை இழுத்துக்கொண்டு கார் ஒன்று வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக காரை தடுத்து நிறுத்தி உடலை மீட்ட போலீசார் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் மதுரா பகுதியில் யமுனை விரைவுச்சாலையில் 10 கி.மீட்டர் தூரத்திற்கு மனித உடலை சாலையில் தரதரவென இழுத்தபடி ஒருவர் காரை ஓட்டி வந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த புத்தாண்டு தினத்தில் இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது காரில் மோதி விபத்தில் சிக்கினர்.

மனித சடலத்தை இழுத்து வந்த கார்
வந்த வேகத்தில் கார் நிற்காமல் சென்றதில் காருக்கு அடியில் சிக்கிய இளம்பெண் பல கி.மீட்டருக்கு சாலையில் இழுத்துச்செல்லப்பட்டு சாலையோரம் நிர்வாணமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தில் கிரேட்டர் நொய்டாவையும் ஆக்ராவிற்கும் இடையேயான யமுனை விரைவுச்சாலையில் கார் ஒன்று மனித சடலத்தை இழுத்து வருவதை சுங்க சாவடி ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

எதுவும் கண்ணுக்கு புலப்படவில்லை
ஆக்ரா நோக்கி செல்லும் கார் சடலத்துடன் வருவதை பார்த்ததும் பதறிப்போன சுங்கச்சாவடி ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த போலீசார் காரை மடக்கி பிடித்தனர். உடலை மீட்டு கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது டெல்லியை சேர்ந்த வீரேந்திர சிங் என்பது தெரியவந்தது. பனிமூட்டம் காரணமாக சாலையில் பெரிய அளவில் எதுவும் கண்ணுக்கு புலப்படவில்லை. இதனால், காரில் உடல் சிக்கியிருந்ததது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று போலீசாரிடம் காரின் ஓட்டுநரான வீரேந்திர சிங் கூறியிருக்கிறார்.

போலீஸ் விசாரணை
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஆக்ராவிற்கு திரும்பிக் கொண்டு இருப்பதாகவும் வேறு ஒரு விபத்தில் உயிரிழந்த நபர் தனது காரில் சிக்கியிருப்பதாகவும் வீரேந்திர சிங் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். வீரேந்திர சிங்கை கைது செய்த போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருக்கின்றனர். யமுனை விரைவுச்சாலையில் உள்ள ஜமுனா பார் அபகுதியில் ரத்தக்கறைகள் இருப்பதால் விபத்து அங்கு நடைபெற்று இருக்கலாம் என்றும் அங்கிருந்து உடலை கார் இழுத்து வந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக காரில் வந்திருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

உண்மையாகவே விபத்தா?
சமீப காலமாக அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக அமைந்துள்ளது. இதற்கிடையே காரில் இழுத்துவரப்பட்ட நபரின் அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. 35 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. யமுனை விரைவுச்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உண்மையாகவே விபத்தா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications