உபியில் பயங்கரம்! வீட்டை காலி செய்ய மறுத்த தாயை தீ வைத்து எரித்த மகன்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வீட்டை விட்டு காலி செய்ய மறுத்த 60 வயது தாயை மகன் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் முக்தாபூர் கிராமத்தை சேர்ந்தவர் மஹாஜன் சோன்கர் (35). திருமணமான இவர் தனது மனைவி மற்றும் 60 வயது தாய் ராஜகுமாரியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசிக்க வேண்டும் எனக்கூறி, தாய் ராஜகுமாரியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறி வந்தார். ஆனால், ராஜகுமாரி வீட்டிலிருந்து செல்லவில்லை. இது தொடர்பாக தாயிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்த சோன்கர் மகாஜன், கடுமையான குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
தனது தாய் வீட்டைவிட்டு வெளியேறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சொல்லி முதலில் தனது மனைவிக்கு விஷம் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவர் விஷம் அருந்த மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகாஜன் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை கண்ட சோன்கரின் தாய் ராஜகுமாரி தனது மகனை தடுக்க முயற்சித்து இருக்கிறார்.
அவரையும் தாக்கிய சோன்கர், தாய் என்றுகூட பார்க்காமல் தீ வைத்து எரித்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தாயையும் மகனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கை விசாரித்து வரும் போலீஸ் ஆய்வாளர், ஆராய் அஜர் சேத் தெரிவிக்கையில், "மிர்சாப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகுமாரிக்கு பலத்த தீ காயங்கள் ஏற்பட்டதால் உயர்சிகிச்சைக்காக வாரணாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரம் வாரணாசி தனியார் மருத்துவமனையில் மகாஜன் உயிருக்கு போராடி வருகிறார்." என்றார்.












Click it and Unblock the Notifications