மாமியார் கொடுமையால் தாய் வீட்டுக்கு வந்த மகள்.. சான்ஸ் கிடைத்தது என அத்துமீறிய காமகொடூர தந்தை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவருடன் தாய் வீட்டிற்கு வந்த மகளை கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குடும்பப் பிரச்னைகள், பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம், தானேவில் 4 வயது இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, கிருஷ்ணகிரியில் மாணவர்களுக்குப் பாலியல் வன்கொடுமை என தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
நாள்தோறும் ஏதாவதொரு பாலியல் பிரச்னை, வன்கொடுமை பிரச்னைகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. போதைப் பொருள் பழக்கம், மது உள்ளிட்டவற்றால் குற்றச் செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீடு, பள்ளி, கல்லூரி, பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளுமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற பகுதிகளாக மாறி வருகிறது.
பெண்கள், குழந்தைகள் வெளியில் செல்வதற்கே அச்சப்படும் வகையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மதுவை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதை எந்தக் கட்சியினரும் செயல்படுத்துவது இல்லை.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் புகுந்த வீட்டில் இருந்து கணவருடன் பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த மகளை கடந்த நான்கு ஆண்டுகளாக தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், மாமியாருக்கும், அப்பெண்ணுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது கணவருடன் தன் தாய் வீட்டிற்கே அந்தப் பெண் திரும்பி வந்துள்ளார். அப்பெண்ணின் தாயார் இறந்ததால் அந்த வீட்டில் அவரது தந்தை மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், புகுந்த வீட்டில் இருந்து கணவருடன் வீட்டுக்கு வந்த பெற்ற மகளை அவரது கணவர் இல்லாத நேரத்தில் தந்தை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் என கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் தந்தையின் தொல்லை அதிகரித்ததையடுத்து, அந்தப் பெண் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் தனது தந்தை மீது புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டடுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று வந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 60,000 அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications