பாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்ற அமைச்சர்.. உபி அமைச்சரவையிலிருந்து அதிரடி நீக்கம்
லக்னோ: பாஜகவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் உத்தரப்பிரதேச அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் இடம்பெற்றிருந்தது. அந்த கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில எம்எல்ஏக்கள் இணை அமைச்சர்களாக பொறுப்பில் இருந்தனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் ராஜ்பர் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த அவர், தனது கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.
ஒன்று கூடும் எதிர்கட்சிகள்.. தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிரே நாளை தர்ணா.. சந்திரபாபு நாயுடு தகவல்
செருப்பால் அடிக்க வேண்டும்
இதனால் ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபகாலமாக பாஜகவை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என சமீபத்தில் பேசினார். அவரது இந்த பேச்சு உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ராஜினாமா ஏற்கப்படவில்லை
இதைத்தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து விலகுவதாக கூறி ஓம் பிரகாஷ் ராஜ்பர், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஆளுநருக்கு கடிதம்
இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பரை தனது அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பரிந்துரை கடிதம் அனுப்பினார். இதேபோல் இணை அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவிகளில் இருக்கும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் உடனடியாக நீக்க பரிந்துரை செய்தார்.
அமைச்சரவையிலிருந்து நீக்கம்
இந்த பரிந்துரையை கவர்னர் ராம் நாயக் ஏற்றுக்கொண்டு, ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இதேபோல் அக்கட்சியின் பிற உறுப்பினர்களும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.