மகள் தொடர்பாக வந்த "வாட்ஸ்அப் கால்".. அதிர்ச்சியில் உயிரைவிட்ட தாய்.. சைபர் மோசடியின் பகீர் பின்னணி
லக்னோ: மகள் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளதாக வாட்ஸ்அப் காலில் வந்து மிரட்டப்பட்ட நிலையில், அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே தாய் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சைபர் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வழிப்பறி, திருட்டுச் சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் தற்போது இருந்த இடத்தில் இருந்தே வங்கிக் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. சைபர் குற்றங்கள் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் சிக்குவது வாடிக்கையாக உள்ளன.

அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு வந்த ஒரு போன் காலில், அவரது மகள் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளதாக பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள அச்சனீரா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாலதி 58, என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், மாலதி வர்மாவுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு கால் வந்துள்ளது. அதில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் காவல் அதிகாரி பேசுவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர், உங்களுடைய மகள் பாலியல் வழக்கில் சிக்கியிருக்கிறார். அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களுடைய மகளை விடுவிக்க வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாயை 15 நிமிடத்துக்குள் கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளனர். மேலும், மாலதியை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக பெண் ஒருவரை அம்மா காப்பாற்றுங்கள் என்று அலறுவது போலவும் பேச வைத்துள்ளனர். இதனை நம்பிய மாலதி வர்மா தனது மகள் யாரிடமோ சிக்கிக் கொண்டுள்ளார் என்று அச்சமடைந்துள்ளனர்.
இதில், திடீரென மாலதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வீட்டின் வாசலிலேயே சரிந்து விழுந்திருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாலதியின் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாலதி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழக்கும் தருவாயில் மாலதி ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே இறந்துள்ளார். அவர் கூறியதை கேட்டு செல்போனை ஆய்வு செய்தபோது அவருக்கு மோசடி அழைப்பு வந்துள்ளதும், அந்த பதற்றத்தில் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் இரட்டிப்பு லாபம், அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்கள், போலியான முதலீட்டு செயலிகள், வலைதளங்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல, முகம் தெரியாதவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்தக் கூடாது.
சைபர் குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்டால் சைபர் குற்றங்களுக்கான ஹெல்ப்லைன் எண்ணான 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாகப் புகார் அளிக்கலாம். அல்லது தங்களது பகுதிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலும் புகார் தெரிவிக்கலாம் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications