"முனிராஜ்".. தமிழக போலீஸ் அதிகாரிக்கு யோகி கொடுத்த "மெகா டாஸ்க்".. யார் இந்த உ.பி. சிங்கம்?
லக்னோ: தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு உத்தர பிரதேசத்தில் முக்கியமான பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேச எல்லையில் டெல்லிக்கு அருகில் உள்ள காஜியாபாத். சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கும் உத்தர பிரதேச மாவட்டங்களில் இதுவும் ஒன்று.
அடிக்கடி இங்கு மத மோதல்கள், கொலைகள், வன்புணர்வு சம்பவங்கள் அதிகம் நடந்து வந்தன. இந்த மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத் அரசு கடுமையாக முயன்றும் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை. அப்போது அங்கு எஸ்.எஸ்பியாக இருந்தவர் பவன் குமார். இவரும் தொடர்ந்து சொதப்பிக்கொண்டு இருந்தார். இவரின் செயலில் திருப்தி இல்லாத யோகி ஆதித்யநாத் அவரை பணியிடை நீக்கம் செய்து.. வெயிட்டிங் லிஸ்டில் இருக்க உத்தரவிட்டார்.
அப்போது காஜியாபாத் மாவட்டத்தின் புதிய எஸ்.எஸ்.பி நியமனத்திற்கான அறிவிப்பை ஆதித்யநாத் வெளியிட்டார். அந்த அறிவிப்பில் இருந்த பெயர் ஜி.முனிராஜ் ஐபிஎஸ்!
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா நியமனம்
யார் இவர்?
உத்தர பிரதேசத்தின் சிங்கம் என்று அழைக்கப்படும் அதிகாரிதான் ஜி.முனிராஜ். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் உத்தர பிரதேசத்தில் மிக முக்கியமான ஐபிஎஸ் அதிகாரியாக உருவெடுத்து இருக்கிறார். முதலில் பொறுப்பு எஸ்.எஸ்பி அதிகாரியாகவே முனிராஜ் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் வந்த சில வாரங்களில் காஜியாபாத்தில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்தடுத்து பல ரவுடிகள், கொலையாளர்கள், ரேப்பிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். ஜி.முனிராஜ் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டன. முக்கியமாக இவர் மேற்கொண்ட என்கவுண்டர் நடவடிக்கைகள் அதிகம் கவனிக்கப்பட்டது .
என்கவுண்டர்
காஜியாபாத்தில் இவர் மேற்கொண்ட என்கவுண்டர் நடவடிக்கைகள் கவனம் பெற்ற நிலையில்தான் அவருக்கு உ.பி சிங்கம் என்றும் பெயர் வைக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வரான பின் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்தன. அங்கு நடைபெற்ற என்கவுண்டர் சம்பவங்கள் தேசிய அளவில் பேசப்பட்டது. தினசரி 4 என்கவுண்டர்கள் கூட நடைபெற்றன. முக்கியமாக கொலை, கொள்ளை கேஸ்களில் தொடர்புடைய பலர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அதேபோல் இந்த என்கவுண்டர்களுக்கு பிள்ளையார் சுழி போட்டதே ஜி.முனிராஜ் ஐபிஎஸ்தான். இவர் என்கவுண்டர்களை தொடங்கி வைத்த நிலையில்தான் யோகி ஆதித்யநாத் அதை பின்பற்ற தொடங்கினார் என்று கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத்தின் குட் லிஸ்டில் இருக்கும் அதிகாரிகளில் ஜி.முனிராஜ் ஐபிஎஸ் முக்கியமானவர் ஆவார். இதன் காரணமாகவே புலந்த்ஷெஹர், பரேலி, அலிகர், ஆக்ரா போன்ற பாதுகாப்பு குறைவான மாவட்டங்களில் இவரை எஸ்.பியாக யோகி ஆதித்யநாத் நியமனம் செய்தார்.
தமிழ்நாடு போலீஸ்
தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகளுக்கும் கூட இவர் உதவியாக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் வடஇந்திய கொள்ளையர்களை பிடிக்க, உத்தர பிரதேச குற்றவாளிகள் இங்கே தவறு செய்துவிட்டு உ.பியில் தலைமறைவாகி இருந்தால் அவர்களை பிடிக்கவும் முனிராஜ் உதவியாக இருந்துள்ளார். கோவையில் கொள்ளைபோன ரூ.44 லட்சம் பணத்தை மீட்க இவர்தான் தமிழ்நாடு போலீசாருக்கு உதவினார். அதற்காக இவர் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கிறார். யோகி சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு வைக்க முடியாது.
பாஜக
ஏனென்றால் பாஜக நிர்வாகிகள் மீது கூட இவர் அங்கு துணிச்சலாக நடவடிக்கை எடுத்துள்ளார். பரேலியில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறி பாஜக நிர்வாகிகள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தார். இவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் பட்டமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது அயோத்தி மாவட்ட காவல்துறை எஸ்எஸ்பி.யாக தற்போது ஜி.முனிராஜ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அயோத்தியில் அடுத்த வருடம் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது.
ராமர் கோவில்
அங்கு ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த கட்டுமானம் முடிந்த பின் அங்கு மிகப்பெரிய அளவில் கோவில் திறப்பு விழா நடக்க உள்ளது. இதற்காக பல மாநில தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் அங்கே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை பாஜக மிக பிரமாண்டமாக நடத்த உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த நிகழ்வு நடக்க உள்ளது. அதனால் நிகழ்வை இதுவரை இல்லாத அளவிற்கு ஆன்மிகம் + அரசியல் கலந்த நிகழ்வாக நடத்த பாஜக திட்டமிட்டு இருக்கிறது. கோவில் திறப்பதற்கு முன் 1 மாதத்திற்கு மிகப்பெரிய கொண்டாட்ட நிகழ்வுகளும் நடக்க உள்ளன. இந்த நிலையில்தான் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஜி.முனிராஜ் ஐபிஎஸ் அதிகாரியை யோகி ஆதித்யநாத் இந்த மாவட்டத்தின் எஸ்எஸ்பி அதிகாரியாக நியமனம் செய்துள்ளார். இவர் மீது உள்ள நம்பிக்கை காரணமாக இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
யார் இவர்?
முக்கியமாக நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் இன்றில் இருந்தே அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். வறுமையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கோவை அரசு வேளாண் பல்கலைக்கழகத்தில் இவர் படித்தவர். 2009 குடிமைபணி தேர்வுகளை எழுதி அதன் மூலம் ஐபிஎஸ் அதிகாரி ஆனார். நேரடியாக உத்தர பிரதேச மாநிலத்தில் இவருக்கு அடுத்த வருடம் போஸ்டிங் போடப்பட்டது. அதில் இருந்து உத்தர பிரதேசத்தில்தான் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது இவருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.