உ.பி வயலில் கிடந்த "நிர்வாண" உடல்.. காலைக்கடன் கழிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கொடுமை
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மேலும் ஒரு குற்றச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
17 வயதுள்ள சிறுமியின் நிர்வாண உடல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. உத்தரப் பிரதேசம் இது போன்ற குற்றங்களில் நம்பர் 1 மாநிலமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர்.
மத்திய பிரதேச பழங்குடிப் பெண்கள் பைக் மெக்கானிக் வேலை செய்வது ஏன்?
குற்றம்
பெண் தெய்வங்கள் அதிகம் இருக்கும் இந்தியாவில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2020ஐ விட 2021ம் ஆண்டு இந்த குற்றங்கள் 15% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. அதாவது 2020ம் ஆண்டு 3,71,503 குற்றங்கள் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட நிலையில் 2021ல் இந்த எண்ணிக்கை 4,28,278 ஆக அதிகரித்துள்ளது. அதாவது நாளொன்றுக்கு 1,173 பெண்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.
மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்
ஒரு மணி நேரத்திற்கு 48 பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த வரிசையில் உத்தரப் பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அம்மாநிலத்தில் அவுரியாவில் உள்ள ஒரு வயல் வெளியில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் ஒன்று நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், தனது மகள் காலைக் கடன் கழிக்க வயல்வெளிக்கு சென்றதாகவும் வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பாத நிலையில், அவளை தேடி சென்றபோது அவளது நிர்வாண உடலை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும், தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றமிழைத்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கொலை
காவல்துறை தரப்பில் கூறுகையில், "பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் என்ன நடந்தது என்று சொல்ல முடியும். இது குறித்து விசாரணை மேற்கொள்ள 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த குற்றத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது" என்று அவுரியா காவல்துறை கண்காணிப்பாளர் சாரு நிகாம் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விமர்சனம்
இந்த வீடியோ குறித்து "காவல்துறையினர் சிறுமியின் உடலை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக ஓடுகின்றனர். சிறுமியின் ஏழைக் குடும்பமும் அதன் பின்னால் ஓடுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் வரிசையில் உத்தரப் பிரதேசம் நம்பர் 1 ஆக இருக்கிறது" என காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.