உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடா? அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை.. யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனை என எதிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலின் கோரப் பிடியில் நாடே தற்போது சிக்கித் தவித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளும் நிரம்பி வருகிறது.
மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை.. தரையில் படுத்திருக்கும் நோயாளிகள்.. இது தமிழகத்தின் பரிதாபம்!
இதனால் நாட்டிலுள்ள பல பகுதிகளிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன.
கள்ளச் சந்தை
இந்நிலையில், நேற்று ஊடக ஆசிரியர்களுடன் காணொலி காட்சி மூலம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், "மாநிலத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என எதிலும் ஆக்சிஜன் தட்டப்பாடு இல்லை. இங்து கள்ளச் சந்தையும் பதுக்குதலுமே பெரும் பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்கு எதிராகவும் மிகத் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதிய முறை
மாநிலத்தில் தற்போதுள்ள ஆக்சிஜன் நிலையைக் கண்காணிக்க ஏதுவாக ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளுடன் இணைந்து தணிக்கை நடத்தவுள்ளோம். இதன் மூலம் ஆக்சிஜன் தேவை, உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை உடனுக்குடன் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். மாநிலத்தில் தற்போது தேவைப்படும் அனைவருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி வழங்கப்படுகிறது.
பிரச்சினை இருந்தது உண்மை
அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் உதவி தேவையில்லை. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொடக்கத்தில் மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவதில் பிரச்சினை இருந்தது உண்மைதான். ஆனால் அதை மிக விரைவில் சரி செய்துவிட்டோம். தற்போது மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 8000 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண வைரஸ் இல்லை
கொரோனா வைரசை சாதாரண ஒரு காய்ச்சலாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. நானும் இப்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தனிமையில் உள்ளேன். கடந்த ஆண்டைவிட இந்த முறை கொரோனா பரவல் 30 மடங்கு வேகமாக உள்ளது. மாநில நிர்வாகமும் இதை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்திருந்தோம்.
தட்டுப்பாடு இல்லை
மாநிலத்தில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய அரசு நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ஏற்படுத்தியுள்ளோம். மாநிலம் முழுவதும் புதிதாக 31 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை உருவாக்கும் பணிகளும் இப்போது நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் எந்த இடத்திலும் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு இல்லை. ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை. வரும் மே 1ஆம் தேதி முதல் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும்" என்று அவர் தெரிவித்தார்.