70 ஆண்டுகளில் யாரும் முட்டாள்தனமான திட்டங்களை கொண்டுவரவில்லை... மோடிக்கு ராகுல் பதிலடி
லக்னோ: நரேந்திர மோடியைப் போல் கடந்த 70 ஆண்டுகளாக யாரும் முட்டாள்தனமான திட்டங்களைக் கொண்டு வரவில்லை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் நிலையில், அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு, கப்பர் சிங் வரி போன்ற முட்டாள்தனத்தைக் கடந்த 70 ஆண்டுகளாக யாரும் செய்யவில்லை என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

அனில் அம்பானி, நிரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோர் சுதந்திரமாக உள்ளனர். மாறாக, சவுகிதார், ரேபரேலி மற்றும் அமேதியிலிருந்து வேலைவாய்ப்புகளை கொள்ளையடித்து விட்டனர். அரசுத் துறைகளில் சுமார் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக இருக்கின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு மோடிக்கு நேரமில்லை.
அவரது நண்பர்களுக்கு உதவி செய்வதிலேயே நேரம் சரியாக இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் எதைச் செய்தாலும், அதை தீவிரமாக அலசி ஆராய்ந்த பின்னர் தான் செய்யத் தொடங்குவோம்.
ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம் கொடுப்பது என்பது சாத்தியமற்றது. ஆனால், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 வீதம் 5 ஆண்டுகளுக்கு 3,60,000 ரூபாய் கொடுப்பது காங்கிரஸால் சாத்தியமே எனக் கூறினார். இதற்கிடையே, பிரதமர் மோடியின் சாதி என்னவென்று, தனக்கு தெரியாது என்றும், தானும், எதிர்க்கட்சியினரும் பிரச்சனைகளை மட்டுமே எழுப்பி பிரச்சாரம் செய்கிறோம் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்..












Click it and Unblock the Notifications