ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட யாரையும் வலியுறுத்தியது இல்லை.. சொல்வது யாரு.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பச் சொல்லி யாரையும் வலியுறுத்துவது இல்லை என்றும் அதேநேரம் யாராவது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டால், அது யாரையும் அவமானப்படுத்தும் செயல் இல்லை என்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலைக்காகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒடிசாவின் கட்டக் நகரில் பிறந்தவர். இவரது 124ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்டர். அப்போது, மம்தா பானர்ஜி பேசத் தொடங்கும்போது, கூட்டத்திலிருந்தவர்கள் பேசவிடாமல் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டனர். இதனால் கடுப்பான மம்தா பேசாமலேயே திரும்பிவிட்டார்.
தவறு இல்லை
மேலும், நேதாஜியின் பிறந்த நாள் விழாவுக்குத் தன்னை அழைத்துவிட்டு பாஜகவினர் திட்டமிட்டு அவமானப்படுத்துவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் இது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "ஜெய் ஸ்ரீ ராம் என்று ஒருவர் கூறினால், அதில் தவறு ஒன்றும் இல்லை. இது குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை. அது வாழ்த்து தானே தவிர வேறு ஏதுவும் இல்லை.
அவமானப்படுத்தும் செயல் இல்லை
யாரேனும், வணக்கம் சொன்னால், அதற்கு ஜெய் ஸ்ரீ ராம் என்றே பதில் அளிப்பார்கள். நாங்கள் இதுவரை யாரையும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட வலியுறுத்தியதே இல்லை. ஆனால், அதேநேரம் யாராவது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டால், அது யாரையும் அவமானப்படுத்தும் செயல் இல்லை. எனவே, இது குறித்து கவலை கொள்ளவும் தேவையில்லை" என்றார்.
மோசமான சட்ட ஒழங்கு
தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது. அங்கு முன்பு இருந்த அரசிலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. அதேபோல தற்போதும் அங்கு நடைபெறும் வன்முறை மற்றும் கலவர சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேநேரம் நாட்டிலே சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ள ஒரு மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது" என்றார்.
மேற்கு வங்க தேர்தல்
மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கிவிட்டனர். சில வாரங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய தலைவரான சுவேந்து ஆதிகாரி உட்பட 40 பேர் அமித ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அதேபோல கடந்த சில நாட்களாகவே திரிணாமுஸ் காங்கிரஸ் அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து பாஜகவில் இணைந்தனர்.