காவல்துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம்! உ.பியில் 63 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பும் பணி தீவிரம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு ஜனவரியில் காலியாக உள்ள 63 ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் அம்மாநில இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 63 ஆயிரம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் வரும் ஜனவரியில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 52699 காவலர்கள், 2469 இன்ஸ்பெக்டர்கள் (சப்-இன்ஸ்பெக்டர்கள்), 2430 ரேடியோ ஆபரேட்டர்கள், 545 கிளார்க்குகள், 472 கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் மற்றும் 55 கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் காவல்துறையில் பணியமர்த்தப்பட இருக்கின்றனர். இது தவிர விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய 521 வீரர்களுக்கும் காவல்துறையில் பணி வழங்கப்படும் என் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை ஆண்களை எடுப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு, பெண்களையும் காவல்துறையில் சேர்க்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு உ.பி மாநில இளைஞர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உத்தரப் பிரதேசம் நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் முதன்மையானதாக இருக்கிறது. எல்லா துறைகளிலும் இந்த வளர்ச்சியை எட்ட நாங்கள் தீவிர முயற்சி செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications