கொரோனாவிற்கு இடையே கன்வார் யாத்திரை.. கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்.. உ.பி அரசுக்கு நோட்டீஸ்!
லக்னோ: உத்தர பிரதேச அரசு கன்வார் யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஹரித்வாரில் உள்ள கங்கை நதியை எடுத்து அதன் மூலம் சிவனுக்கு பூஜை செய்வதற்காக கன்வார் யாத்திரை ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது வழக்கம். வடஇந்தியாவில் இருக்கும் பல்வேறு இந்து மத துறவிகள், சாமியார்கள், பக்தர்கள் ஹரித்வார் வந்து கங்கையில் இருந்து நீரை எடுத்து செல்வார்கள்.
தங்கள் பகுதியில் உள்ள சிவன் சிலைக்கு இந்த தண்ணீரை ஊற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். வடஇந்தியா முழுக்க பல லட்சம் பேர் இந்த விழாவில் கலந்து கொள்வது வழக்கம்.

அனுமதி
கடந்த வருடம் கொரோனா காரணமாக இந்த நிகழ்வு நடக்காத நிலையில், இந்த வருடம் உத்தர பிரதேச அரசு ஜூலை 25ம் தேதி இந்த விழாவை நடத்த அனுமதி அளித்துள்ளது. உத்தரகாண்ட் அரசு இந்த விழாவிற்கு அனுமதி மறுத்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு முடிந்து மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற அச்சம் நிலவும் போது இந்த அனுமதி உத்தர பிரதேச அரசு மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு
உத்தர பிரதேச அரசின் இந்த அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கன்வார் யாத்திரை நடத்தும் உத்தர பிரதேச அரசின் முடிவிற்கு எதிராக இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன், நீதிபதி பிஆர் கவாய் அமர்வு விசாரணை நடத்தியது. இதில் உத்தர பிரதேச அரசு, மத்திய அரசு, உத்தரகாண்ட் அரசு மூன்றுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

நீதிபதி
இந்த விசாரணையில் கோபமாக பேசிய நீதிபதி ரோஹின்டன் நாரிமன், பிரதமர் மோடி மூன்றாம் அலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

தவறு
அப்படி இருக்கும் போது உத்தர பிரதேச அரசு கான்வார் யாத்திரை நடத்த அனுமதி அளித்துள்ளது. மத்திய, மாநில அரசின் நிலைப்பாடு குறித்து நாங்கள் இதில் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இந்த முடிவுகள் மக்களை குழப்புகிறது. நாட்டில் என்ன நடக்கிறது, ஏன் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றது என்று தெரியாமல் மக்கள் குழம்பிப்போய் உள்ளனர், என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நோட்டீஸ்
இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் உடனே இதற்கு உத்தர பிரதேச, உத்தரகாண்ட் அரசும், மத்திய அரசும் பதில் அளிக்க வேண்டும். வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும். ஜூலை 25ல் யாத்திரை நடக்கும் முன் இதில் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications