6 வருடத்தில் 10713 என்கவுண்டர்! உத்தர பிரதேசத்தில் ஆதித்யநாத் ஆட்சியில் "ராஜ்ஜியம்"..ஷாக் ரிப்போர்ட்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வெறும் 6 வருட ஆட்சியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 10,713 என்கவுண்டர்களை மேற்கொண்டு உள்ளதாக ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கின்றது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியாகி ஹிட் அடித்து உள்ளது. இந்த படம் தமிழ்நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. வெகு காலத்திற்கு பின் ரஜினிகாந்திற்கு ஒரு வெற்றிப்படம் அமைந்துள்ளது.

ரஜினிகாந்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில், அவரின் ரசிகர்களே விமர்சனம் வைக்கும் விதமாக ரஜினிகாந்த் உத்தர பிரதேசம் பயணம் செய்துள்ளார்.
நேற்று மாலை ரஜினிகாந்த் முதல்வர் ஆதித்யநாத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அவர் வீட்டு வாசலுக்கு வந்த போதே ரஜினிகாந்த் அவரின் காலில் விழுந்து மரியாதையை செய்தார். நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது ஏன் என்று விவாதம் எழுந்துள்ளது. ஆதித்யநாத் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் இந்து மத துறவி, அவர் கோவில் பதவிகளிலும் இருக்கிறார், அவர் தலைமை பூஜாரியாகவும் இருக்கிறார். அதனால் அவரின் காலில் விழுந்தார் என்று ஒரு சாரார் கருத்து சொல்கின்றனர்.
ஆனால் மோடி காலில் விழாமல், ஆதித்யநாத் காலில் ரஜினி விழ வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதன்படி ஆதித்யநாத் எதிர்கால பிரதமராகும் வாய்ப்புகள் உள்ளதாக பாஜக கருதுகிறது. மோடிக்கு பின் யோகிதான், ஏன் 2024 தேர்தலில் கூட ஆதித்யநாத் பிரதமராக முன்னிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
அதை எல்லாம் மனதில் வைத்துதான் ரஜினிகாந்த் ஆதித்யநாத் காலில் விழுந்தார். இதனால்தான் மோடி காலில் கூட விழாத ரஜினி தன்னைவிட 20 வயது குறைந்தவரின் காலில் விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
விளக்கம்: ரஜினி இப்படி ஆதித்யநாத் காலில் விழுந்ததை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். முக்கியமாக யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட என்கவுண்டர் நடவடிக்கைகளை குறிப்பிட்டு நெட்டிசன்கள் நடிகர் ரஜினிகாந்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் வெறும் கடந்த 6 வருட ஆட்சியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 10,713 என்கவுண்டர்களை மேற்கொண்டு உள்ளதாக ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கின்றது. தி இந்து ஆங்கில ஊடகத்தில் சமீபத்தில் வெளியான ரிப்போர்ட் ஆகும் இது. யோகி ஆதித்யநாத் ஆட்சியின் 6 ஆண்டுகளில் 10,713 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும் 5,967 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 1,708 குற்றவாளிகள் காயமடைந்ததாகவும் உத்தரப் பிரதேச காவல்துறை கூறியுள்ளது.
இதில் 2017ல் மட்டும் 3,152 என்கவுண்டர்கள் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு 4-5 என்கவுண்டர்கள் உத்தர பிரதேசத்தில் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீரட்டில் மட்டும் 2017ம் வருடத்தில் கிட்டத்தட்ட 63 பேர் அதிகபட்சமாக என்கவுண்டர் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கே அடிக்கடி என்கவுண்டர் நடப்பதாக செய்திகள் வந்த நிலையில்தான் 6 வருடத்தில் 10,713 என்கவுண்டர்களை மேற்கொண்டு உள்ளதாக போலீசார் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications