மாபெரும் வரவேற்பு அளித்த மக்கள்.. முதல் பேரணியே அசத்தல்.. உ.பி களத்தில் பிரியங்கா காந்தி!
இன்று காலை டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் செல்லும் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சிக்காக தனது அரசியல் பணிகளை தொடங்க இருக்கிறார்.
லக்னோ: காங்கிரஸ் கட்சியில் முழு நேர அரசியலில் களமிறங்கி இருக்கும் பிரியங்கா காந்தி சார்பாக இன்று உத்தர பிரதேசத்தில் பேரணி நடைபெற்றது. உத்தர பிரதேச காங்கிரஸ் பிரியங்காவை வரவேற்கும் விதமாக இந்த பேரணியை நடத்தியது.
நமஸ்தே.. நான்தான் பிரியங்கா காந்தி பேசுகிறேன்.. இந்த ஆடியோவை உத்தர பிரதேச மக்கள் கடந்த ஒரு வாரமாக கண்டிப்பாக வாட்ஸ் ஆப்பில் கேட்டு இருப்பார்கள். காங்கிரஸ் கட்சியின் சக்தி ஆப்பில் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்களுக்காக வெளியிட்ட ஆடியோதான் இது.
ஆம், இந்த ஆடியோவோடுதான் பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம் தொடங்கி உள்ளது. இன்று உத்தர பிரதேசம் சென்ற அவர் லக்னோவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். மிக பிரமாண்டமாக அவரது அரசியல் பயணம் தொடங்கி உள்ளது.

என்ன பேசி இருக்கிறார்
நாளை நான் லக்னோ வருகிறேன். உங்களை சந்திப்பேன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஒன்றாக நாம் எல்லோரும் இணைந்து நல்ல அரசியல் ஒன்றை தொடங்க முடியும். என் நண்பர்களே, தங்கைகளே, வலிமையற்றவர்களே.. உங்களின் வாக்குகளுக்கு வலிமை இருக்கிறது, என்று அந்த ஆடியோவில் பிரியங்கா காந்தி பேசி இருக்கிறார்.

பெரிய பேரணி
இன்று காலை லக்னோ விமான நிலையம் வந்த பிரியங்காவிற்கு காங்கிரஸ் விமான நிலையத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அவர் உத்தர பிரதேச காங்கிரஸ் அலுவலகம் செல்லும் வழியில் பெரிய பேரணி போல நடத்தி அவரை காங்கிரஸ் கட்சி வரவேற்றது. அந்த வழியில் 28 இடங்களில் சிறிய சிறிய மேடைகள் அமைக்கப்பட்டு பிரியங்காவை பற்றி புகழ்ந்து கொண்டு இருந்தனர்.

மரியாதை செலுத்தினார்
பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தியும், காங்கிரசின் இன்னொரு உத்தர பிரதேச மாநில பொறுப்பாளரான ஜோதிராதித்ய சிந்தியாவும் வந்தனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து இன்று லக்னோவில் உள்ள லால்பாக் சந்திப்பில் மக்களை சந்தித்து பேச இருக்கிறார்கள். அதேபோல் அவர்கள் செய்தியாளர்களையும் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. இதுதான் பிரியங்கா காந்தி காங்கிரசில் தீவிர அரசியலுக்கு வந்த பின் மக்களிடம் முதல்முறை பேசுவது ஆகும்.

பேச முடிவு
அதேபோல் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் வரிசையாக 12,13,14 ஆகிய நாட்களில் இவர்கள் உரையாற்ற போகிறார்கள். வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை நடக்கும் இந்த ஆலோசனையில், உத்தர பிரதேசத்தில் எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்யலாம், பொதுக்கூட்டம் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications