ஜன., திறக்கப்படும் ராமர் கோவில்.. அயோத்தியில் களமிறங்கும் ஏஐ தொழில்நுட்பம்.. ஏன் தெரியுமா? செம
லக்னோ: அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் செயற்கை நுண்ணறிவுடன் வேத நகரமாக அயோத்தியை மாற்ற உத்தர பிரதேச மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. கட்டுமான பணிக்காக பிப்ரவரி மாதம் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

அதன்பிறகு 2020 ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளுக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence or AI) மூலம் தீர்வு காண உத்தர பிரதேச மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ராமர் கோவில் திறக்கப்பட்டவுடன் அயோத்தி வரும் மக்களின் எண்ணிக்கை என்பது அதிகமாகும். இதனால் மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டியது முக்கியமான விஷயமாகும்.
அந்த வகையில் தான் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தாம் தீர்த்த விகாஸ் பரிஷத் என்ற அமைப்பை உருவாக்கினார். இதற்கிடையே தான் தற்போது அயோத்தி மேம்பாட்டு ஆணையம் சார்பில் டெல்லியை தலைமையிடமாக கொண்ட அராஹாஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது.
இந்த நிறுவனம் புவிசார்ந்த தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மூலம் தரவுகளை சேகரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவின் மூலம் அயோத்தி நகரத்தின் வளர்ச்சி, மேற்கொள்ள வேண்டிய பணிகள், மக்கள் வருகை உள்ளிட்ட விஷயங்களை இந்த நிறுவனம் தரவாக சேகரித்து வழங்க உள்ளது.
மேலும் அயோத்தியில் காற்று, தண்ணீர், சுற்றுச்சூழல் மாசுபாடு அளவுகள் குறித்த தரவுகளை வழங்கி அதனை கட்டுக்குள் கொண்டு வர இந்த நிறுவனம் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்துக்கு உதவ உள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டு வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் முதல் வேதகால நகரமாக அயோத்தி மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications