"என்னையே கொளுத்துறீங்களா?" மக்கள் மீது நெருப்பு அம்புகளை வீசி அலறவிட்ட 10 தலை 'ராவணன்'.. என்னாச்சு?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தசரா கொண்டாட்டத்தில் ராவணனின் உருவபொம்மைக்கு தீ வைத்த போது, அதில் இருந்து வெளியான தீப்பிழம்புகள் நெருப்பு அம்புகளாக பாய்ந்ததில் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர்.
இதேபோல, ஹரியானாவிலும் ராவணனின் உருவபொம்மையைக் கொளுத்தியபோது இருந்து வெடித்து சிதறிய பட்டாசுகள், மக்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக பாய்ந்தது.
இந்த சம்பவங்களில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும், சிலருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட இந்தியாவில் தசரா
தசரா தொடங்கியதில் இருந்து உத்தர பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களை பொறுத்தவரை, அரக்கன் மகிஷாசுரமர்த்தினியை சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்தததற்காக தசரா கொண்டாடப்படுகிறது. ஆனால், வட மாநிலங்களில் ராவணனை, ராமன் வதம் செய்ததற்காக தசரா கொண்டாடப்படுகிறது. இதனால் அங்கு பல்வேறு இடங்களில் ராவணனின் பிரம்மாண்ட உருவபொம்மை அமைக்கப்பட்டு, அதை தீயிட்டு கொளுத்தி மக்கள் மகிழ்வார்கள்.

ராவண வதம் நிகழ்ச்சி
இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக வட மாநிலங்களில் ராவணனின் உருவப்படத்தை கொளுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், பெருந்தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து, இந்த ஆண்டு தசரா விழாவில் ராவணன வதம் நிகழ்ச்சிகளுக்கு பல மாநில அரசுகள் அனுமதி அளித்தன. அதன்படி, டெல்லியில் ராம்லீலா மைதானம், செங்கோட்டை மைதானம் உள்ளிட்ட இடங்களில் நேற்று விஜயதசமி நாளன்று இந்நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

ராவணன் பொம்மையை கொளுத்திய மக்கள்
உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள முசாஃபர்நகர் அரசுக் கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ராவணனின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பல அடி உயரத்தில் 10 தலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான ராவணனின் உருவபொம்மை அமைக்கப்பட்டிருந்தது. ராவணன் வெடித்து சிதறுவதற்காக அதற்குள் ஏராளமான பட்டாசுகளும் வைக்கப்பட்டிருந்தன.

மக்கள் மீது பாய்ந்த நெருப்பு அம்புகள்
இந்நிலையில், ராவணனின் உருவபொம்மை கொளுத்தப்பட்டதும் சிறிது நேரத்தில் அது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மக்கள் ஆரவாரத்துடன் அதை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ராவணன் பொம்மைக்குள் இருந்த ராட்சத ராக்கெட் பட்டாசுகள், எதிர்பாராத விதமாக மக்கள் கூட்டத்தில் சீறிப்பாய்ந்தன. இதை பார்க்கும் போது உண்மையிலேயே அசுரன் ராவணன் தான், மக்கள் மீது நெருப்பு அம்புகளை விடுவது போல இருந்தது. நாலாபுறமும் பட்டாசுகள் சீறிப் பாய்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர். இதில் சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல, ஹரியானாவிலும் இந்த ராவண வதம் நிகழ்ச்சியின் போது ராவணன் பொம்மையில் இருந்து பட்டாசுகள் மக்கள் மீது பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications