நீதி கேட்டு பயணம்... மெர்சிடிஸ் பென்ஸ் பஸ்ஸில் விஜய் யாத்ரா... அகிலேஷ் யாதவை கலாய்க்கும் பாஜக..!
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நீதி கேட்கும் பயணத்தை தொடங்கியிருக்கிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
விஜய் யாத்ரா என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள இந்த நீதி கேட்கும் பயணம் அடுத்த 3 மாதங்களுக்கு உ.பி.யின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இதனிடையே அகிலேஷ் யாதவ் விஜய் யாத்ரா நடத்தவில்லை என்றும் மக்களிடம் செல்வது போல் நடித்து மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசுப் பேருந்தில் ஏ.சி. யாத்ரா நடத்துவதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.
அக்ஷரா கண்ணு.. சாமி சத்தியமா.. என் கிட்னியை உன் அம்மாவுக்கு தரேன்.. பிக்பாஸ் தாமரைச் செல்வி
சட்டமன்றத் தேர்தல்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், இப்போதே அம்மாநில அரசியல் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை அமைக்கத் தொடங்கிவிட்டனர். மீண்டும் உ.பி.யில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், விஜய் யாத்ரா என்ற பெயரில் மக்களை சந்தித்து நீதி கேட்கும் பயணத்தை இன்று தொடங்குகிறார்.
நீதி கேட்கும் பயணம்
விவசாயிகள், இளைஞர்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், என அனைத்து தரப்பினர் மீதும் யோகி தலைமையிலான பாஜக அரசு அடக்குமுறைகளை ஏவியிருப்பதாகவும் அவர்களுக்காக நீதி கேட்டு இந்த யாத்திரையை தொடங்கியுள்ளதாகவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். யாத்திரைக்கு மத்தியில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அகிலேஷ் யாதவ் பொதுக்கூட்டத்தில் பேசவிருக்கிறார்.
பென்ஸ் பஸ்
அகிலேஷ் யாதவுக்காக ஓய்வுக்கட்டில் உள்ளிட்ட சகல வசதிகளுடன் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசுப் பேருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பேருந்தின் வெளிப்புறம் முலாயம் சிங் யாதவ், முகமது ஆசம் கான் உள்ளிட்டோரின் படங்கள் பளிச்சிடுகின்றன. இதனிடையே அகிலேஷ் யாதவ் தொடங்கியுள்ள இந்த விஜய் யாத்ராவை விமர்சித்துள்ள பாஜக, மக்களிடம் செல்வது போல் அகிலேஷ் நடிக்கிறார் என்றும் கொரோனா காலத்தில் யோகி களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றிய போது, வீட்டில் ஏ.சி. அறையில் அமர்ந்து ட்விட் மட்டுமே வெளியிட்டு வந்ததாகவும் சாடியுள்ளது.
2 முதல்வர்கள்
இதனிடையே ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் தேர்தலுக்கு முன்பாக இது போன்ற ஒரு மெகா மக்கள் சந்திப்பு பயணத்தை நிகழ்த்தினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு பேருமே இப்போது முதலமைச்சர்களாக இருக்கிறார்கள். தேர்தலின் போது மட்டும் பிரச்சாரத்திற்கு செல்லும் வழக்கம் மாறி, தேர்தல் வருவதற்கு பல மாதங்களுக்கு முன்பே மக்களுடன் மக்களாக ஐக்கியமாகிக் கொள்ளும் புதிய வியூகம் இப்போது பரவலாக அனைத்து அரசியல் கட்சிகளாலும் பின்பற்றப்படுகிறது.