அமேதியில் காந்திய காணோம்! தேர்தலுக்கு முன்பே காங்கிரசுக்கு தோல்வி தெரிந்துவிட்டது..ஸ்மிருதி கிண்டல்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். வழக்கமாக அமேதியில் போட்டியிடும் ராகுல் இந்த முறை ரேபரேலியில் போட்டியிட்டிருப்பது, காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டிருப்பதாக பொருள் என ஸ்மிருதி இராணி விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் லோக்சபா தொடங்கியுள்ளது. கடந்த 19ம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதேபோல ஏப்.26ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து மே 7ம் தேதி 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட ரேபரேலி தொகுதியில் இன்று ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

வழக்கமாக ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திதான் போட்டியிடுவார். ஆனால் இந்த முறை ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. கடந்த 2004ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்றிருக்கிறார். 1952ம் ஆண்டிலிருந்து இடையில் 4 ஆண்டுகள் தவிர மற்ற அத்தனை ஆண்டுகளிலும் இந்த தொகுதியில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திரா காந்தியும் 1967ல் இந்த தொகுதியில் போட்டியிட்டுதான் வெற்றி பெற்றார். அமேதி தொகுதியும் ஏறத்தாழ இதே அரசியல் சூழல்தான். 1980ல் சஞ்சய் காந்தி இந்த தொகுதியில் வெற்றி பெற்று காந்தி குடும்பத்தின் வெற்றியை தொடங்கி வைத்தார். 1981 முதல் 1991 வரை ராஜீவ் காந்தி இந்த தொகுதியில் எம்பியாக இருந்திருக்கிறார். 1999 முதல் 2004 வரை சோனியா காந்தி இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். பின்னர் 2004 தொடங்கி 2014 வரை ராகுல் காந்திதான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆனால், கடந்த 2019ம் ஆண்டு ராகுல் காந்தி இந்த தொகுதியில் தோல்வியடைந்தார். பாகவின் ஸ்மிருதி இராணி இந்த தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்தார்.
எனவே இந்த முறை ஸ்மிருதி இராணியை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் அமேதியில் போட்டியிடாமல் ரேபரேலியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். 1980 முதல் 2019 வரை காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தொகுதியில் போட்டியிட்டு வந்தனர். ஆனால் முதல் முறையாக இந்தமுறை காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.
இது குறித்து விமர்சித்துள்ள ஸ்மிருதி இராணி அமேதியில் ராகுல் போட்டியிடாதது மூலம் காங்கிரஸின் தோல்வி தெரிந்துவிட்டது என விமர்சித்துள்ளார். "அமேதியில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் நிறுத்தக் கூடாது என்ற காங்கிரஸின் முடிவு அதன் தோல்வியை உறுதி செய்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications