”முஸ்லிம்களுக்கு கட்டாய கருத்தடை.. இந்து ராஷ்டிரம்” - உபி கிரந்தி சேனா மாநாட்டில் மதவெறி பேச்சு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கிரந்தி சேனா என்ற அமைப்பு நடத்திய மாநாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்ய வேண்டும் என பேசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கிரந்தி சேனா என்ற இந்துத்துவ அமைப்பு சார்பில் செயற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
சிறப்பு பேச்சாளர்கள் பலர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் ஏராளமான பெண்கள் உட்பட 500-க்கும் அதிகமானோர் இந்த பங்கேற்றனர்.
மதவெறி பேச்சு
கிரந்தி சேனா மாநாட்டில் கலந்துகொண்ட இந்துத்துவ தலைவர்கள் பலர் சிறுபான்மையினருக்கு எதிரான மதவெறி கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். கோடிக்கணக்கான வங்கதேச மற்றும் ரோஹிங்கியா மக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் அவர்களை இந்தியாவை விட்டே விரட்ட வேண்டும் எனவும் அவர்கள் பேசியுள்ளனர்.
இஸ்லாமியர் மக்கள் தொகை
குறிப்பாக கிரந்தி சேனாவின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் காஷ்யப் பேசுகையில், "இஸ்லாமியர்களைவிட இந்துக்கள் குறைவாகவே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். ஆட்சி, நிர்வாகத்தில் இருக்கும் அனைவரும் இந்துக்களாக இருப்பதால் நாம் பாதுகாப்பாக உள்ளோம். ஆனால் நாளை நம்முடைய மக்கள் தொகை குறைந்து இஸ்லாமியர்கள் எண்ணிக்கை உயர்ந்தால் நாம் பாதுகாப்பாக இருக்க மாட்டோம்.
கட்டாய கருத்தடை
எனவே மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்தை கொண்டு வர வேண்டும். இஸ்லாமியர்களுக்கு கட்டாய கருத்தடை செய்ய வேண்டும்." என்றார். காஷ்மீர் பண்டிட்டுக்களை மீண்டும் அவர்களின் சொந்த பகுதியில் குடியமர்த்த வேண்டும் என வலியுறுத்திய தலைவர்கள், இந்தியாவை இந்து ராஷ்டிரமாக உடனடியாக அறிவித்தாக வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். அதேபோல் மதத்தை இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாக்க இளம் இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
திரிசூலம் வைத்திருங்கள்
இந்த கூட்டத்தில் பேசிய ராஜஸ்தானை சேர்ந்த கோயில் பூசாரி சஞ்சீவ் சங்கர், "ஏராளமான இந்துத்துவ அமைப்புகள் இருந்தும் கோயில்கள் இடிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை. பல கோயில்கள் இடிக்கப்படுவது குறித்து இந்துத்துவ இயக்கங்கள் பேசுவதில்லை. கிரந்தி சேனா சார்பில் திரிசூல யாத்திரை நடத்த இருந்தோம். ஆனால், அதற்கு அரசு தடை விதித்துவிட்டது. இந்த யாத்திரை நடந்தாலும் நடக்காவிட்டாலும் இளைஞர்கள் அனைவரும் திரிசூலத்தை கையில் வைத்திருக்க வேண்டும்."என்றார்.
வங்கதேச அகதிகள்
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில் மூன்றரை கோடி ரோஹிங்கியா மற்றும் வங்கதேச மக்கள் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளனர். அவர்களால் இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியிலும் அச்சுறுத்தல் உள்ளது. போலி மதச்சார்பின்மை இந்து சமுதாயத்துக்கும் மிகப்பெரிய எதிரி." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.