"ஆண்கள் பாவம்! எங்களால் என்ன செய்ய முடியும்" மனைவி கொடுமையால்.. திருமணமான ஒரே ஆண்டில் இளைஞர் தற்கொலை
லக்னோ: தனது மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டி ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு ஐடி ஊழியர் எடுத்த வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பி வருகிறது. அதில் ஆண்கள் குறித்து யாராவது பேச வேண்டும் என்றும் மனைவியால் தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். தன்னிடம் இருந்து விவாகரத்து பெறும் மனைவி தன்னை துன்புறுத்துவதாகச் சொல்லி வீடியோ வெளியிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

ஐடி ஊழியர் தற்கொலை
இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் நடந்துள்ளது. அங்குப் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த மானவ் சர்மா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு மனைவி தான் காரணம் என்று வீடியோவை பதிவு செய்து கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த பிப்ரவரி 24ம் தேதி அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இரு நாட்களுக்குப் பிறகு அந்த வீடியோவை அவரது சகோதரி கண்டுபிடித்துள்ளார். தனது மனைவி வேறு ஒரு இளைஞர் உடன் தொடர்பில் இருப்பதாகவும் இதை தன்னால் ஏற்கவே முடியவில்லை என்று அந்த ஏழு நிமிட வீடியோவில் மானவ் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.
வேறு ஒருவருடன் தொடர்பு
மானவ் ஷர்மா அந்த வீடியோவில், "இந்த வீடியோவை நான் அதிகாரிகளுக்காகப் பதிவு செய்கிறேன். சட்டம் ஆண்களையும் பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் ஆண்கள் யாரும் இல்லாத நிலை உருவாகும்.. என் மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்தார். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.. இனி என்ன செய்ய முடியும்.
ஆண்களைப் பற்றியும் யோசியுங்கள்
எனக்குத் தற்கொலை செய்து கொள்வதில் பிரச்சனை இல்லை. நான் சாகத் தான் வேண்டும். ஆனால், ஆண்களைப் பற்றியும் கொஞ்சமாவது யோசியுங்கள். நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து, ஆண்களின் உரிமை குறித்தும் பாதுகாப்பு குறித்தும் பேசுங்கள். ஆண்கள் தனிமையில் அவதிப்படுகிறார்கள். நான் போய்விட்டால் எல்லாம் சரியாகிவிடும். நான் முன்பே தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன்" என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தற்கொலை செய்து கொண்ட நபரின் மனைவி நிகிதாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிகிதா, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
மனைவி மறுப்பு
அவர் மேலும் கூறுகையில், "தற்கொலை செய்து கொண்ட நாளில் அவரே தான் என்னை என் தாய் வீட்டிற்கு வந்து விட்டுச் சென்றார். அவர் சொல்வது எல்லாம் எனது கடந்த காலம் பற்றியது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு அவர் சொன்னது போல எதுவும் நடக்கவில்லை. ஆனால், அவர் கேட்பதாக இல்லை. அவர் இதற்கு முன்பு பலமுறை தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். நானே அவரை மூன்று முறை தடுத்துள்ளேன்.. அவர் தினமும் குடித்துவிட்டு என்னை அடித்துத் துன்புறுத்துவார்.
அவருடைய பெற்றோரிடம் நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.. தற்கொலைக்கு முயல்கிறார் எதாவது செய்ய வேண்டும் என்றும் கூட கூறினேன். ஆனால், அவர்கள் இது கணவன்-மனைவி பிரச்சினை எனச் சொல்லி எதுவும் செய்யவில்லை. அவரது சகோதரியையும் அழைத்து நிலைமையை விளக்கினேன்.. ஆனால், அவரும் அமைதியாகத் தூங்கு எல்லாம் சரியாகிடும் என மட்டும் சொன்னார்" என்று அதில் கூறியிருக்கிறார்.
போலீஸ் சொல்வது என்ன
தற்கொலை செய்து கொண்ட நபரின் வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் மேலும் கூறுகையில், "இந்த சம்பவம் பிப்ரவரி 24ம் தேதி நடந்துள்ளது. மானவ் ஷர்மா உடல் ராணுவ மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அன்று யாரும் புகார் அளிக்கவில்லை.
இரு நாள்களுக்குப் பிறகு வீடியோ கண்டறியப்பட்ட நிலையில், அதன் பிறகே புகார் அளித்தனர். மனைவியிடம் விசாரித்த போது புகாரில் உண்மை எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications