இதெல்லாம் புத்தாண்டே கிடையாது.. குடித்துவிட்டு ஆட்டம் போட்டால்.. சாபம் விடும் சாத்வி பிரக்யா தாகூர்
லக்னோ: ஆங்கில புத்தாண்டு மேற்கத்திய கலாசாரம் என்றும் டிசம்பர் 31 இரவு முழுவதும் குடித்துக்கொண்டு ஆட்டம் போட்டுவிட்டு மறுநாள் தாமதமாக பிற்பகலில் எழக்கூடியவர்கள் .. பிரகாசமான விடியலை பார்க்க மாட்டார்கள் என்று பாஜக எம்.பி சாத்வி பிரக்யா தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆங்கிலப்புத்தாண்டு நமது கலசாரத்திற்கு எதிரானது. மேற்கத்திய கலாசாரங்களை கொண்ட ஆங்கில புத்தாண்டை கொண்டாடக் கூடாது என்று இந்துத்வா அமைப்புகளும் சில வலதுசாரி அமைப்புகளும் கூறி வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப்புத்தாண்டுக்கு முன்பாக இதுபோன்ற பேச்சுக்கள் எழுவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.

சாத்வி பிரக்யா தாகூர்
இந்த நிலையில், பாஜக எம்.பி சாத்வி பிரக்யா தாகூரும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை கடுமையாக சாடியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அறியப்படும் சாத்வி பிரக்யா தாகூர் மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி எம்.பியுமான சாத்வி பிரக்யா தாகூர் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- நமது புத்தாண்டு சைத்ரா நவராத்ரியின் முதல் நாளின் போதுதான் பிறக்கிறது. இந்த நேரத்தில் புதிய பயிர்கள் பயிரிடப்படும்.

அது தான் நமக்கு புத்தாண்டு
சுற்றுச்சூழலில் தூய்மையான காற்றும் வாசனையும் மலரும். துர்கை தேவியின் ஆசிர்வாதத்தை நாம் அப்போது பெறுவோம். அதுவே நமக்கு புத்தாண்டு ஆகும். அந்த நேரத்தில் அனைத்தும் புதியதாக இருக்கும். இயற்கையும் அந்த நேரத்தில் புதிதாக இருக்கும். புதிய தொடக்கத்தை நம்மால் உணர முடியும். அதை நாம் கொண்டாடுவோம். நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் அளிக்கும் விஷயத்தை நாம் செய்ய வேண்டும்.

நாகரீகம் ஒருபோதும் நமது கலாசாரம் ஆகாது
டிசம்பர் 31 இரவு முழுவதும் குடித்துக்கொண்டு ஆட்டம் போட்டுவிட்டு மறுநாள் தாமதமாக பிற்பகலில் எழுந்து இருப்பவர்கள்.. பிரகாசமான காலையை பார்க்க மாட்டார்கள். அவர்கள் புதிதாக எதைக் காண்பார்கள்? இதுபோன்ற மேற்கத்திய நாகரீகம் ஒருபோதும் நமது கலாசாரம் ஆகாது" என்றார். 2022- ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை உலகம் முழுவதும் உற்சாகமாக வரவேற்கப்பட்டது. இந்தியாவிலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்
டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இரவு விடுதிகளிலும் உற்சாகமாக இளைஞர்கள் புத்தாண்டை ஆடிப்பாடி கொண்டாடி வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் உற்சாகமாக நடைபெற்றது. தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கோவில்களிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு புத்தாண்டை ஒட்டி பக்தர்கள் சிறப்பு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications