என்னங்க இது.. அப்படியே உல்டாவா இருக்கு.. ரயில்வே கேட்டில் காத்து நின்ற ரயில்.. இந்தியாவில் தான்
லக்னோ: வழக்கமாக ரயில்வே கேட்டில் கார்கள், பஸ்கள் போன்ற வாகனங்கள் தான் சாலையில் காத்திருக்க ரயில் சென்றுகொண்டிருக்கும். ஆனால் இதற்கு அப்படியே உல்டாவாக உத்தர பிரதேசத்தில் கார், பஸ், மோட்டார் சைக்கிள் செல்வதற்காக ரயில் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவது மிக இயல்பான ஒன்றே. அதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. அதுவும் பெங்களூர், சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் எல்லாம் டிராபிக்குகளை பற்றி சொல்லவே தேவையில்லை. பீக் ஹவர்சில் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடங்களுக்கு செல்வதற்கு கூட மணிக்கணக்கில் ஆகிவிடும்.

சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு சென்று விட்டாலோ எதோ சாதித்து விட்டது போல உணர்வு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும். அந்த அளவுக்கு இந்தியாவில் சாலைகளில் டிராபிக் உள்ளது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். டிராபிக் போன்ற பிரச்சினைகள் இன்றி ரயில்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். இதனாலாயே ரயிலில் பயணிக்க பெரும்பாலும் பயணிகள் விரும்புவதுண்டு.
குறிப்பாக ரயில்வே கிராசிங்கில் கூட ரயில்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டு இருக்க.. இருபக்கமும் வாகனங்கள் காத்திருக்கும். ஆனால், உத்தர பிரதேசத்தில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசலில் ரயில் ஒன்று சிக்கிக் கொண்டு இருக்கிறது. படிக்கும் போதே... நீங்கள் புருவத்தை உயர்த்தி பார்ப்பது புரிகிறது. உண்மையில் அப்படித்தான் நடந்து இருக்கிறது.
இந்த வினோத சம்பவம் குறித்த வீடியோவும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் உத்தர பிரதேச மாநிலம் பனாரசில் உள்ள ஒரு ரயில்வே கிராசிங்கில் கடுமையான டிராபிக் ஜாம் உள்ளது. கார்களும் பைக்குகளும் அணிவகுத்து நிற்பதோடு, தண்டவாளத்தை கடந்து கொண்டிருக்கின்றன. வாகனங்கள் செல்வதற்காக ரயில் நிறுத்தப்பட்டு நிற்கிறது. இன்னொரு பக்கம் டிராபிக் போலீஸ், வேக வேகமாக போக்குவரத்தை சீர் செய்து கொண்டு இருக்கிறார்.
இப்படியான காட்சிகள் தான் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. எனினும், பனாரசில் ஏற்பட்ட கடுமையான இந்த போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. பொதுவாகவே பனாரசில் சாலைகள் மிகவும் குறுகலாவே இருக்கும். இதனால், வாகன போக்குவரத்து கொஞ்சம் அதிகமானால் கூட டிராபிக் ஜாம் ஏற்பட்டு விடும் என்பது கவனிக்கத்தக்கது. ரயில்வே கிராசிங்கில் ரயில் கடந்து செல்வதற்கு காத்திருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் ஜாலியாகவும் இந்தியாவில் காணப்படும் மோசமான டிராஃபிக் ஜாம் குறித்தும் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக ஒரு நெட்டிசன் கூறுகையில், இந்தியாவில் தான் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும். கார்கள் செல்ல "காத்திருக்கும் ரயில்.." என ஸ்மைலியுடன் பதிவிட்டு கலாய்த்து இருக்கிறார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், பனராசில் மட்டும் இல்லை பெங்களூர், டெல்லி போன்ற மெட்ரோ ரயில்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல்தான் காணப்படுகிறது என்று கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன், வாகன ஓட்டிகளின் பொறுமையின்மையே இதுபோன்ற நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது என சாடியிருக்கிறார். எனினும், இந்த சம்பவம் எப்போது நடந்தது என்ற தெளிவான விவரங்கள் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications