உ.பி. சட்டசபை தேர்தல்.. பாஜகவை தொடர்ந்து கோதாவில் குதித்த காங்...சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குறி!
லக்னோ: அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பணிகளை பாஜகவை பின்பற்றி காங்கிரஸும் தொடங்கி உள்ளது. தலித்துகள், சிறுபான்மையினர் வாக்குகளை ஒருங்கிணைக்க ஆலோசனை கூட்டங்களை காங்கிரஸ் நடத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக கட்சி ரீதியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக மீது அதிருப்தியில் இருக்கும் பிராமணர்களை சமாதானப்படுத்தும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

அதேபோல் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மிக நெருக்கமான முன்னாள் தலைமை செயலாளர் அனூப் சந்திர பாண்டே, தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் குஜராத் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.கே. ஷர்மாவுக்கும் தேர்தலை முன்வைத்து கூடுதல் முக்கியத்துவம் வழங்குகிறது பாஜக.
பாஜகவை தொடர்ந்து சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தேர்தல் பணியில் குதித்துள்ளன. முஸ்லிம் வாக்குகளை குறித்து உலமாக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி இருக்கிறார் உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லூ. உலமாக்கள் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டிருக்கிறோம். உபி. தேர்தல் அறிக்கையில் அவை இடம்பெறும் என்றார் அஜய்.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இந்த முறை வெற்றி பெறும். பிரியங்கா காந்தி தலைமையில் உ.பி.யில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமையும் என்றும் நம்பிகை தெரிவித்தார் அஜய்குமார். காங்கிரஸ் கட்சியின் உலமாக்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் மணீஷ் சுக்லா, காங்கிரஸ் கட்சி ஏன் முஸ்லிம் வாக்குகளை மட்டும் குறிவைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கையே மக்களிடையே பிரிவினையை உருவாக்குவதுதான். ஆனால் காங்கிரஸின் இந்த வியூகத்துக்கு மக்கள் சரியான பதிலடி தருவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications