பாஜகவுக்கு ராமர்...எங்களுக்கு அனுமர்.. உ.பி. தேர்தலில் கலக்கும் அகிலேஷ் யாதவின் ரத யாத்திரை
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நடத்தி வரும் ரத யாத்திரைக்கு மக்கள் ஆதரவு பெருகிவருவதால் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை அடுத்த வாரம் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் பாஜக படுதீவிரமாக உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பட்டாளமே படுமும்முரமாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
உ.பி. தேர்தலைப் பொறுத்தவரையில் இம்முறை அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். பாஜக அதிக இடங்களில் வென்றாலும் 2017 தேர்தலை ஒப்பிடுகையில் 100 இடங்கள் குறைவாக கிடைக்கும் என்றும் கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேநேரத்தில் அகிலேஷ் யாதவுக்கான செல்வாக்கு அதிகரித்து வருவது உ.பி.யில் பாஜகவை கதிகலங்க வைத்திருக்கிறது.
அதுவும் பாஜக பாணியிலேயே இப்போது அகிலேஷ் யாதவ் நடத்தி வரும் ரதயாத்திரைக்கான மக்கள் ஆதரவால் இருளடித்துப் போனவர்களாக உள்ளனர் பாஜக தலைவர்கள். இந்துக்களின் வாக்குகளை ராமர் பெயரால் பாஜக ஒருமுகப்படுத்தி வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் அனுமானை கையில் எடுத்திருக்கிறார் அகிலேஷ் யாதவ். அவரது ரத யாத்திரையில் பல இடங்களில் அனுமார் படம், அனுமார் கையில் இருக்கும் கதாயுதம் ஆகியவை பரிசாக அகிலேஷ் யாதவுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தலித்துகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அம்பேத்கர் சிலைகளும் அகிலேஷ் யாதவுக்கு பரிசாக அளிக்கப்படுகின்றன. அகிலேஷ் யாதவுக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவு உ.பி. தேர்தல் களநிலவரத்தை தலைகீழாக மாற்றினாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications