உ.பி தேர்தல்: தீவிர இந்துத்துவாவை கையில் எடுத்த பாஜக- ஜாதி அஸ்திரத்தால் மிரட்டும் மாயாவதி!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது. இந்துத்துவா கொள்கையை மையமாக வைத்து பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க, பாஜக) பிரசாரம் செய்கிறது. இன்னொரு பக்கம் தலித்துகள், பிராமணர்களுக்கு எதிரான கட்சி பாஜக என சாடிக் கொண்டிருக்கிறது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி).
உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி இருக்கின்றன.
2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக 312 இடங்களில் வென்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 47; மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களில் வென்றன. உ.பி.யில் ஒரு காலத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 7 இடங்கள்தான் கிடைத்தன. பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தள் 9 இடங்களைப் பெற்றது. ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் எஸ்.பி.எஸ்.பி கட்சிக்கு 4 இடங்கள் கிடைத்தன.
அரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்
அமித்ஷா பிரசாரம்
உத்தரப்பிரதேசத்தில் தற்போது ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து அனைத்துவிதமான வியூகங்களுடன் களத்தில் நிற்கிறது. பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தமது தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. உ.பி.யில் இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தும் வகையில் இந்துத்துவா கொள்கையை முன்வைக்கிறது பாஜக. உ.பி.யில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். லக்னோ, மிர்சாபூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இந்துத்துவா கோட்பாட்டை அழுத்தம் திருத்தமாக உரத்து பேசினார் அமித்ஷா.
அயோத்தி ராமர் கோவில்
அமித்ஷா பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி கொடுத்தது பா.ஜ.க. இப்போது அதை நிறைவேற்றி காட்டிவிட்டோம். அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் விரைவில் உருவாகப் போகிறது. 500 ஆண்டுகாலமாக நாம் நடத்திய போராட்டத்துக்கு விடிவு கிடைத்திருக்கிறது. முந்தைய அரசுகளால் ஏன் ராமர் கோவிலை கட்ட முடியாமல் போனது? பகவான் கிருஷ்ணர் அவதரித்த பூமியை ஏன் அந்த அரசுகளால் மேம்படுத்த முடியாமல் போனது? பகவான் ராமர் பல ஆண்டுகாலம் வாழ்ந்த சித்ரகூட் ஏன் மேம்படுத்தப்படவில்லை?
உ.பி.யில் நல்லாட்சி
நமக்கு முந்தைய அரசுகள் இந்துக்களின் வழிபாட்டு தலங்கள் மீது அக்கறை காட்டவில்லை. அவர்களுக்கு வாக்கு வங்கி அரசியல்தான் முக்கியம். உத்தரப்பிரதேசத்தில் கடந்த கால ஆட்சிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு அஞ்சி மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறிய நிலைமை இருந்தது (2013-ம் ஆண்டு முசாஃபர் நகர் மத மோதல்). இப்போது உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மாஃபியாக்கள் போலீசாரிடம் சரணடையும் நிலைதான் இப்போது உள்ளது என்று இந்துத்துவா கோட்பாட்டு அடிப்படையில் பேசினார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்
அதேபோல் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், இந்துக்களின் புனித பூமிகளான அயோத்தி, சித்ரகூட், விந்தியாஞ்சல், வாரணாசி, பிரக்யராஜ் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்து காங்கிரஸ் ஆட்சிக்கால தவறுகளை சரி செய்தது என்றார்.
பிராமணர்-தலித்துகளுக்கு எதிரான அரசு
இந்த பிரசாரங்கள் ஒருபக்கம் இருக்க, பிராமணர்கள், தலித்துகளுக்கு எதிரான கட்சிதான் பா.ஜ.க. என சாடுகிறது மாயாவதியின் பகுஜன் சமாஜ். அக்கட்சியின் பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா, உ.பி.யில் ஆளும் பாஜக அரசு தலித்துகளுக்கு எதிரானது; பிராமணர் சமூகத்துக்கும் எதிரானது. பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த விகாஸ் துபேவை சுட்டுக் கொன்ற பாஜக அரசு அவரது மனைவி குஷி துபே மீது தேவை இல்லாமல் வழக்கு பதிவு செய்திருக்கிறது. விகாஸ் துபே வீட்டுக்கு சோதனையிட சென்ற சம்பவத்தில் அப்பாவி பிராமணர்கள் பலர் மீதும் வழக்குப் போட்டுள்ளது பாஜக அரசு. பகுஜன் சமாஜ் கட்சி எப்போதும் பிராமணர்களுக்கு மதிப்பளிக்கக் கூடிய கட்சி. பிராமணர்களின் குரலாக பகுஜன் சமாஜ் கட்சி பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்துக்களின் புனித தலங்களான மதுரா-பிருந்தாவன், வாரணாசி, அயோத்தியில் பகுஜன் சமாஜ் ஆட்சிகாலத்தில்தான் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆகையால் பிராமணர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த பிராமணர்கள் எங்களோடு கை கோர்க்க வேண்டும் என்றார்.
சமாஜ்வாதி கட்சி
இதேபோல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் பிராமணர் வாக்குகளை குறிவைத்து பிரசாரம் செய்கிறது. காங்கிரஸும் பிராமணர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குறிவைத்து களத்தில் நிற்கின்றன. இந்த பெரிய கட்சிகள் அல்லாமல் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, சில மாநில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
தகிக்கும் களம்
பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் பீகாரில் கூட்டணி ஆட்சியில் உள்ள வி.ஐ.பி. கட்சி, உ.பி. மாநில கட்சியான நிஷாந்த் கட்சி ஆகியவை தனித்தனியே போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. நிஷாந்த் என்பது உ.பி.யில் மீனவர் சமூகமாகும். இந்த வாக்குகளை முன்வைத்தே இரு கட்சிகளும் பாஜகவிடம் பேரம் பேசி வருகின்றன. மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரன் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தளம், சந்திரசேகர் ஆசாத்தின் பீம் ஆர்மி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவையும் உ.பி. தேர்தல் களத்தில் இறங்கிவிட்டன. இதனால் சட்டசபை தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே உ.பி. தேர்தல் களம் தகிக்க தொடங்கிவிட்டது.