விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபம்... முடிந்தது டெல்லியில்...பரவுகிறது உ.பி,யில்... பரிதவிக்கும் பாஜக
லக்னோ: டெல்லியில் 10 மாதங்களாக மையம் கொண்டிருக்க விவசாயிகள் போராட்டம் எனும் காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது வலுவடைந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் புயலாக உலுக்கி எடுத்து வருகிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிர், பனி, வெயிலில் போராடி வந்தனர் விவசாயிகள். 10 மாதங்களாக இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
உச்சநீதிமன்றம் ஏற்கனவே தலையிட்டு விவசாய சட்டங்களை இடைநிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் விவசாய சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறும்வரை ஓயப் போவதில்லை என்கின்றனர் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள். மத்திய அரசு சிலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது.

விவசாயிகள் திட்டவட்டம்
மத்திய அரசைப் பொறுத்தவரை விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரத் தயார் என்கிறது. போராடும் விவசாயிகளோ சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற்றாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பான வழக்கில் போராடும் விவசாயிகள் மீது அதிருப்தியை அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தும் இருந்தது.

ஹரியானா போராட்டம்
இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இதுவரை 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தும் உள்ளனர். டெல்லி போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உ.பி. விவசாயிகள் கலந்து கொண்டனர். ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் விவசாயிகள் முன்னெடுத்தனர். இதனால் ஹரியானா அரசு விவசாயிகள் மீது போலீஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.

லக்கிம்பூர் படுகொலைகள்
அதேபோல் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து அமைதிவழியில் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மத்திய இணை அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா தமது காரை ஏற்றி லக்கிம்பூர் கேராவில் விவசாயிகளை படுகொலை செய்த சம்பவம் நாட்டை உலுக்கி எடுத்துள்ளது. நாடு முழுவதும் ஒட்டுமொத்த விவசாயிகளையும் போராட்டத்தில் குதிக்க வைத்துள்ளது.

பாஜகவுக்கு அதிர்ச்சி
சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் பாஜகவுக்கு இந்த விவகாரம் மிகப் பெரிய நெருக்கடியை தந்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சிகள் அந்த கட்சி இந்த கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுவிட்டன. இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் உ.பி. பாஜக அரசு விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்தும் வருகிறது.

நெருக்கடியில் பாஜக
இத்தனைக்கும் உ.பி. தேர்தலை எதிர்கொள்ள ஒட்டுமொத்த மத்திய அமைச்சர் பட்டாளத்தை பாஜக களமிறக்கி இருந்தது. அதேபோல் ஒவ்வொரு ஜாதியினருக்கும் தங்கள் மீது அதிருப்தி எல்லாவற்றையும் பட்டி டிங்கரிங் செய்து கொண்டிருந்தது பாஜக. ஆனால் இப்போது அத்தனையையும் ஆகப் பெரிய குழிதோண்டி புதைக்கும் வகையில் லக்கிம்பூர் வன்முறையும் படுகொலைகளும் பாஜகவை நிலைகுலைய வைத்திருக்கிறது. விவசாயிகளின் உக்கிரப் போராட்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது தெரியாமல் உ.பி. பாஜக தலைவர்கள் திணறிப் போய் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications