உத்தர பிரதேச தேர்தல்.. இன்று வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை.. பலத்த எதிர்பார்ப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறது உத்தரப்பிரதேச பாஜக.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் நான்கு முனை போட்டி நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக இன்னும் துரிதமாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

பிரசாரம்
உத்தரப்பிரதேச பாஜகவுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் இருந்து 30 ஸ்டார் பேச்சாளர்களைக் களம் இறக்குகிறது உ.பி பாஜக. கோரக்பூரில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். அதேபோல் யோகி ஆதித்யநாத் தொடங்கிய யுவ வாகினி அமைப்பினரும் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தேர்தல் அறிக்கை
இந்நிலையில், உத்தரப்பிரதேச பாஜக இன்று தங்கள் தேர்தல் வாக்குறுதியை வெளியிட உள்ளனர். வேலை வாய்ப்பின்மை, சிலிண்டர் விலை உயர்வு, கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை என பாஜக-வுக்கு பல எதிர்ப்புகள் மக்களிடம் இருக்கின்றன. இதை சமாளிக்கும் விதமாக தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டு, அதன்மூலம் மக்களிடம் தங்கள் வாக்குறுதியைக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர் உபி பாஜகவினர்.

வளர்ச்சி
உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த திட்டங்களைக் குறித்துப் பேச வேண்டும் என்று, இந்துத்வ திட்டங்களை செயல்படுத்தியதைப் பற்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பொருப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக ஆட்சியில் தான் ராமர் கோயில் கட்டுவதற்கு விடிவுகாலம் வந்தது என்ற பாதையில் தங்கள் பிரசாரத்தை கட்டமைத்திருக்கிறார்கள் பாஜகவினர். அதேநேரம் இன்று வெளியாகும் தேர்தல் வாக்குறுதியில் என்ன மாதிரியான திட்டங்கள், வாக்குறுதிகள் இடம் பெறும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சமாஜ்வாதி
உத்தரப்பிரதேச பாஜகவினர் இன்னும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்காத நிலையில், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து புதுப்புது வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். மக்களுக்கு மின்சாரம் இலவசம், விவசாயிகளுக்கு மின்சாரம், 5 லட்சம் ஐடி வேலைவாய்ப்பு, ஏழைகளுக்கு 10 ரூபாய்க்கு உணவு என்ற வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications