கிராமப்புறங்களை மேம்படுத்த சூப்பர் திட்டம்! நிதி திரட்டுதலில் புதிய முயற்சி.. அசத்தும் உ.பி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்யலாம் என்று மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பாஜக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது கிடையாது. யோகி ஆதித்யநாத்தான் தற்போது இந்த சாதனையை செய்திருக்கிறார். இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக பாஜக பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை உத்தரப் பிரதேச அரசு மீது கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு எதுவும் உ.பியில் நடக்கவில்லை. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில்தான் நடைபெற்றது. ஆனால் தற்போது முதல் முறையாக உ.பியில் இந்த மாநாடு நடைபெற்றிருப்பது அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களுக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் 'மாத்ருபூமி' எனும் புதிய திட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தங்களுடைய பங்களிப்பை செய்யலாம். மாநில அரசின் திட்டங்களுக்கு இவர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடியேறிய உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெரும் பணக்காரர்களை உ.பி அரசு அணுகியுள்ளது.
கிராமப்புறங்களை மேம்படுத்த மாநில அரசு 40% நிதியை வழங்கும். சம்மந்தப்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்களிடம் மீதம் நிதியை திரட்டி அரசின் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். தற்போது இந்த திட்டத்திற்கான விரிவான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications