கமிஷன் தரலைன்னு புல்டோசரில் சாலையை தகர்த்த பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்.. கடும் கோபமான யோகி.. போட்ட ஆர்டர்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவுக்கு கமிஷன் தரவில்லை என்பதற்காக அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை புல்டோசர் வைத்து பெயர்த்து எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததார் அளித்த புகாரின் பேரின் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விவாகரம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு வந்த நிலையில், உடனடியாக சாலையை தேசம் செய்தவரிகளிடம் முழு செலவுக்கான தொகையையும் வசூலிக்க உத்தரவிட்டார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

உத்தரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறையினர் ஷாஜகான்பூர் முதல் புடான் வரை சாலை அமைத்து வருகிறார்கள். இந்த சாலையை அமைத்து வரும் ஒப்பந்ததாரரிடம், பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் ஐந்து சதவீத கமிஷன் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் எம்எல்ஏ ஆதரவாளர்கள் என கூறிக்கொண்ட நபர்களுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் தரவில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜக்வீர் சிங் உள்ளிட்ட எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் திடீரென புல்டோசரை கொண்டு வந்த புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை பெயர்த்து எடுத்துள்ளனர்.
இதையடுத்து உத்தரப்பிரதேசதில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு கமிஷன் தரவில்லை என்பதற்காக அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அகற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திதான் நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பேசுபொருளாக மாறி உள்ளது எதிர்க்கட்சியினர் பலரும் கண்டித்து அறிக்கை விட தொடங்கினர்.
இதையடுத்து இந்த விவகாரம் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து சாலையை சேதப்படுத்தியவர்கள் பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், அவர்களிடம் இருந்து புதிய சாலை அமைக்க ஆகும் முழு தொகையையும் வசூலிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ஷாஜகான்பூர் முதல் புடான் வரை சாலை அமைத்து வரும் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ் சிங் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், சாலையை சேதப்படுத்தியதாக 15-20 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது உள்பட பல்வேறு பிரிவின் கீழ் கடந்த அக்டோபர் 3ம் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய மாவட்ட எஸ்பி அசோக் குமார் மீனா, பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர் ஜக்வீர் சிங் தலைமையில் சுமார் 20 பேர், கமிஷன் தரவில்லை என்று கூறி கடந்த அக்டோபர் 2ம் தேதி புல்டோசர் மூலம் சாலையை தோண்டி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றார்.
இதனிடையே மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் பாண்டே கூறுகையில், , இந்த வழக்கு தொடர்பாக முழு தகல்களை திரட்டி உள்ளோம். சப் கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ளோம். விசாரணை அமைப்பின் அறிக்கைக்கு பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையில், எம்எல்ஏ வீர் விக்ரம் சிங் கூறுகையில், ஜக்வீர் சிங் என்னுடைய ஆதரவாளரோ அல்லது எனது உதவியாளரோ இல்லை. ஆனால் அவர் பாஜகவைச் சேர்ந்தவர் தான். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications