சர்க்கரை உற்பத்தியில் அசத்தும் உத்தரப் பிரதேசம்.. இனி இந்தியாதான் இதில் நம்பர் ஒன்! உ.பி நம்பிக்கை
லக்னோ: உலகின் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா விரைவில் முதலிடம் பிடிக்கும் என உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை சாத்தியப்படுத்த சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் விரைவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "சர்வதேச சர்க்கரை கூட்டமைப்பின் 63வது கூட்டம் சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இதில் 2024ம் ஆண்டுக்கான சர்வதேச சர்க்கரை அமைப்பின் தலைவர் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பொறுப்பு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடுகளிடம் ஒப்படைக்கப்படும்.
இந்தியாவை பொறுத்த அளவில் சர்க்கரை உற்பத்தியில் உ.பி முன்னணியில் இருக்கிறது. இங்கு ஏராளமான அளவில் சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி உலக அளவில் இந்தியா, சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் பிடிக்கும். உலக சர்க்கரை உற்பத்தியில் இந்தியா 20% பூர்த்தி செய்கிறது. தற்போது இந்தியா உலக சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications