உ.பி. ஜெகஜ்ஜால கில்லாடி ஆசிரியை கைது! 25 பள்ளிகளில் பணிபுரிந்து ரூ1 கோடி ஊதியம் பெற்று மோசடி!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 25 பள்ளிகளில் பணிபுரிந்து 13 மாதங்களில் ரூ1 கோடி ஊதியம் பெற்று மோசடி செய்த ஆசிரியை அனாமிகா சுக்லா கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் தொடர்பான விவரங்கள் ஆன்லைனில் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் EMIS என்ற பெயரில் இத்திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடத்தில் அமைவிடம், உட்கட்டமைப்பு, ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்கள் அனைத்தும் ஆசிரியர்களாலே இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த முழு விவரமும் இணையத்தில் இடம்பெற்று விடுகிறது.

25 பள்ளிகளில் ஆசிரியை பணி
இதேபோல உத்தரப்பிரதேச மாநில அரசும் கல்வித்துறையில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. 25 பள்ளிகளில் அனாமிகா சுக்லா என்ற ஒரே ஆசிரியை பணிபுரிவதாக அதில் இடம்பெற்றிருந்தது. கடந்த 13 மாதங்களாக இப்படி பணிபுரிந்து ரூ1 கோடி வரையில் ஊதியம் பெற்றிருக்கிறார் அனாமிகா.

அறிவியல் ஆசிரியை விசாரணை
இதனால் ஆடிப்போன உத்தரப்பிரதேச மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. ரேபரேலியைச் சேர்ந்த அனாமிகா, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலா (KGBV) பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றியவர். அனாமிகாவின் மோசடி வெளிச்சத்துக்கு வந்த நிலையில் முதலில் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த ஒரு பதிலையும் அனாமிகா அளிக்கவில்லை. இதனையடுத்து களத்தில் இறங்கியது உத்தரப்பிரதேச போலீஸ்.

அதிகாரிகள் உடந்தையா?
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அனாமிகா மோசடி செய்தது உறுதியானது. இதனால் அவரை உத்தரப்பிரதேச போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தற்போது அனாமிகா சுக்லா தமது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்திருக்கிறார். அனாமிகாவுக்கு உதவியாக வேறு யாரும் அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டனரா? என்பது குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேச அரசு.
Recommended Video

அதிகாரிகளுக்கும் தண்டனை
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச அமைச்சர் அமித் சதீஸ் திவேதி, கல்வித்துறையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே டிஜிட்டல் முறையை கொண்டு வந்தோம். இதற்காகவே ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் டேப்லெட் கொடுத்தும் வந்தோம். கொரோனா லாக்டவுனால் டேப்லெட்டுகள் முழுமையாக கொடுக்கப்படவில்லை. விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் டேப்லெட்டுகள் கொடுக்கப்பட்டுவிடும். அனாமிகா சுக்லாவுக்கு உடந்தையானவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications