பயங்கரவாதிகளுக்காக துடிக்கும் இதயங்கள்... சமாஜ்வாதி, காங். மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
லக்னோ: பயங்கரவாதிகளுக்காக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சியினரின் இதயங்கள் துடிக்கின்றன என்று பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மார்ச் 7-ந் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும். அதன்பின்னர் மார்ச் 10-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உ.பி.யில் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. பஸ்தி என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

பயங்கரவாதிகளுக்காக துடிக்கிறது
நாம் பாலகோட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தினோம். நமது ஒட்டுமொத்த தேசமே பாலகோட் தாக்குதல்களை நினைவுகூர்ந்து கொண்டாடி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளோ ஆதாரங்கள் கேட்கின்றன..நமது ராணுவ வீரர்களை சந்தேகிக்கின்றனர். ஏனெனில் அவர்களின் இதயங்கள் பயங்கரவாதிகளுக்காகவே துடிதுடிக்கின்றன.

பாதுகாப்பு கட்டமைப்பு நாசம்
நாட்டை ஆட்சி செய்தவர்கள் நமது பாதுகாப்பு துறை கட்டமைப்பையே சீர்குலைத்துவிட்டனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி வந்தனர். இப்போது பாதுகாப்பு காரிடார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது நமது நாட்டின் வலிமையை வெளிப்படுத்துகிற வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்திலேயே பாதுகாப்பு காரிடார் அமைக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் கங்கா
ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கி தவித்த 1,000க்கும் மேற்பட்டோர் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மத்திய அரசு இரவும் பகலுமாக அவர்களை அழைத்து வருவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உலகின் எந்த மூலையில் பிரச்சனை நிகழ்ந்தாலும் நமது நாட்டின் குடிமக்களை திரும்ப அழைத்து வருவதில் நாம் முன்னுரிமை தந்து வருகிறோம்.

எத்தனால் தயாரிப்பு
நமக்கு எண்ணெய் சுத்தகரிப்பு மையங்கள் இல்லை. அதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். இதனை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்வதில்லை. இப்போது கரும்பில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். எத்தனால் தயாரிப்பு தொழிற்சாலையை மத்திய அரசு அமைக்க இருக்கிறது. இது கரும்பு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Recommended Video

கொசு, மாஃபியாக்கள் ஒழிப்பு
இதேபோல் பல்லியா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ஒட்டுமொத்த பூர்வாஞ்சல் பிராந்தியமும் கொசுக்களாலும் மாஃபியாக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. பிரதமர் மோடியோ ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கொசுக்களை ஒழித்து கட்டினார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மாஃபியாக்களை ஒழித்துக் கட்டினார் என்றார்.












Click it and Unblock the Notifications