பிரதமர் மோடி திறந்து வைத்து ஒரே வாரத்தில் குண்டும் குழியுமான எக்ஸ்பிரஸ்வே சாலை- உ.பி.யில் அதிர்ச்சி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ்வே சாலை ஒரே வாரத்தில் கனமழையால் குண்டும் குழியுமாக பரிதாபமாக காட்சி தருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது புந்தேல்கண்ட் விரைவுச்சாலை. இந்த விரைவு சாலைக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இச்சாலை 28 மாதங்களில் முடிவடைந்துவிட்டது. கடந்த ஜூலை 16-ந் தேதி இந்த விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உத்தரப்பிரதேச விரைவுச் சாலைகள் தொழில்துறை மேம்பாட்டு ஆணைய உதவியுடன் 296 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி விரைவுச்சாலை ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இது பின்னர், ஆறு வழிச்சாலையாக விரிவாக்கப்படும். சித்திரகூட மாவட்டத்தின் பரத்கூப் அருகே உள்ள கோண்டா கிராமத்தில் NH-35லிருந்து எட்டாவா மாவட்டம் குட்ரெயில் கிராமம் வரை நீட்டிக்கப்பட்டு ஆக்ரா - லக்னோ விரைவுச் சாலையுடன் இணைக்கப்படுகிறது. இது சித்திரகூடம், பண்டா, மகோபா, ஹமீர்பூர், ஜலான், அவ்ரையா, எட்டாவா ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக செல்கிறது.
|
பிரதமர் மோடி பெருமிதம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, புந்தேல்கண்ட் விரைவுச்சாலையால், சித்ரகூட் பகுதியிலிருந்து தில்லி செல்வதற்கான பயண நேரம் 3-4 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது, அதைவிட இந்த சாலையால் அதிக பலன் ஏற்படும். இந்த விரைவுச்சாலை, வாகனங்கள் அதிக வேகத்தில் செல்ல வகை செய்வதோடு மட்டுமின்றி, புண்டேல்கண்ட் முழுவதும் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்றார்.
|
புந்தேல்கண்ட் சாலை சேதம்
இந்த நிலையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச்சாலை இப்போது மிக மோசமாக சேதமடைந்துள்ளது. அதுவும் பிரதமர் மோடி திறந்து வைத்து ஒரே ஒருவாரம்தான் ஆகிறது.. அதற்குள் புந்தல்கண்ட் விரைவு சாலை குண்டும் குழியுமாக காவு வாங்கும் பாதையாக உருமாறி நிற்கிறது. அண்மையில் பெய்த கனமழையால்தான் இந்த சேதம் ஏற்பட்டது. ஆனால் ஒரே ஒரு கனமழையை கூட தாங்க முடியாத அளவுக்கு மோசமாக போடப்பட்டுள்ளதா புந்தல்கேண்ட் விரைவு சாலை என்பது உ.பி. அரசியல்வாதிகளின் கேள்வி.

வறுத்தெடுத்த வருண் காந்தி
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜகவின் வருண் காந்தி, ரூ15,000 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த விரைவுச் சாலை, 5 நாட்கள் மழைக்குக் கூட தாக்குப்பிடிக்கவில்லை . அப்படியானால் இந்த விரைவுச்சாலையின் தரம்தான் என்ன? இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 22, 2022 |
அகிலேஷ் யாதவ் விளாசல்
இதேபோல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இந்த மோசமான சாலையின் வீடியோ, போட்டோவை தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், முடிவடையாத திட்டங்களை முடித்ததாக காட்டியுள்ளதற்கு இது ஒரு உதாரணம். புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை மிகப் பெரிய மனிதர்கள்தான் திறந்து வைத்தனர். ஆனால் ஒரே ஒரு வாரத்திலே ஊழல் குழிகள் வெளியே வந்துவிட்டன. நல்லவேளை இதில் விமான ஓடுபாதைகளை அமைக்கவில்லை என விளாசியிருக்கிறார் அகிலேஷ் யாதவ்.












Click it and Unblock the Notifications